செல்வனின் சகோதரர்கள் இருவருக்கு நிபந்தனையற்ற முன் ஜாமின்: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
21 September 2020, 8:34 pmமதுரை: விவசாய நிலத்தை சேதப்படுத்தியதாக பதியப்பட்ட பொய் வழக்கில், சாத்தான்குளத்தைச் சேர்ந்த உயிரிழந்த செல்வனின் சகோதரர்கள் இருவருக்கு நிபந்தனையற்ற முன் ஜாமின் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம், கொம்மடிக்கோட்டையைச் சேர்ந்த பங்கார் ராஜன், செல்வன், பீட்டர்ராஜ் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். அதில் ஆகஸ்ட் 21ம் தேதி மோசமான வார்த்தைகளால் பேசியதாகவும், விவசாய நிலத்தை சேதப்படுத்தியதாகவும் கூறி அதிமுக நிர்வாகி திருமணவேல், அளித்த புகாரின் அடிப்படையில் எங்கள் மூவர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். எங்களுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளது தொடர்பாக சாத்தான்குளம் முன்சீப் கோர்ட்டில் ஏற்கனவே வழக்கு நிலுவையில் உள்ளது இந்த முன்விரோதம் காரணமாக எங்கள் மீது பொய் புகார் அளித்துள்ளனர்.
சாத்தான்குளம் தட்டார்மடம் காவல் ஆய்வாளர் மீது, மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆகவே அவரும்,கண்மூடித்தனமாக அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார. தட்டார்மடம் காவல் ஆய்வாளர் எங்கள்மீது ஏற்கனவே விரோதத்தில் உள்ள நிலையில் நாங்கள் கைது செய்யப்பட்டால் கடுமையாகத் தாக்கப்படும் என அஞ்சியே, முன் ஜாமீன் கோருகிறோம். ஆகவே எங்கள் மீது பதியப்பட்ட பொய் வழக்கில் முன் ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாரதிதாசன், இருவருக்கும் நிபந்தனையற்ற முன் ஜாமின் வழங்கி, வழக்கை முடித்து வைத்தார்.