ஹைதி நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 1400 ஆக உயர்வு…மீட்பு பணிகள் தீவிரம்..!!
Author: Aarthi Sivakumar17 August 2021, 11:23 am
லெஸ் கெயெஸ்: ஹைதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் 1400 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
கரீபியன் கடலில் உள்ள தீவு நாடான ஹைதியின் தெற்மேற்கு பகுதியில் கடந்த 14ம் தேதி இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கடற்கரை நகரமான லெஸ் கெயெஸ் கடும் சேதத்திற்கு உள்ளானது. நில அதிர்வால் வீடுகள், கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகியது.
இதனால் மக்கள் அலறியடித்தபடி வெளியில் ஓடினர். சுமார் 860க்கும் மேற்பட்ட வீடுகள் முழுமையாக இடிந்தன. 700க்கும் மேலானவை கடும் சேதம் அடைந்தன. அருகருகே இருந்த வீடுகள் ஒன்றின் மீது ஒன்றாக வரிசையாக சரிந்து விழுந்த வீடியோ வெளியாகி மனதை பதற வைத்தது. பள்ளி, தேவாலயம், மருத்துவமனை, அரசு அலுவலகம், ஓட்டல் உட்பட பல கட்டடங்களும் இடிந்து விழுந்தன.
மீட்பு பணிகள் உடனடியாக துவங்கிய நிலையில், நேற்று முன்தினம் இரவு வரை பலி எண்ணிக்கை 724 ஆக அதிகரித்துஉள்ளது. 2,800க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். எனினும் 700க்கும் அதிகமானோர் பலியாகி விட்டதாக தகவல்கள் வெளியாகின.
அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வசதியின்றி மக்கள் தவித்து வருகின்றனர். பலரும் அருகில் உள்ள நகரங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். வீடற்ற ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் தங்கி உள்ளனர். நாடு முழுதும் ஒரு மாத காலத்திற்கு அவசர நிலையை பிரதமர் ஏரியல் ஹென்றி அறிவித்துள்ளார்.
இதற்கிடையே, இடிபாடுகளில் சிக்கியோரை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. காயங்களுடன் மீட்கப்படும் மக்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டி இருப்பதால், நகரில் உள்ள பெரும்பாலான மருத்துவமனைகள், நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன.
0
0