வட காசாவை தரைமட்டமாக்கப் போகும் இஸ்ரேல்..? அடுத்த 24 மணிநேரத்தில் நடக்கப்போகும் பயங்கர தாக்குதல்…!!

Author: Babu Lakshmanan
13 October 2023, 11:15 am
Quick Share

வட காசாவை தரைமட்டமாக்கப் போகும் இஸ்ரேல்..? அடுத்த 24 மணிநேரத்தில் நடக்கப்போகும் பயங்கர தாக்குதல்…!!

வட காசாவில் வசித்து வரும் மக்களுக்கு இஸ்ரேல் ராணுவம் 24 மணிநேரம் கெடுவிதித்துள்ளது.

கடந்த 7ம் தேதி இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் அமைப்பினர் திடீரென தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டனர். குறிப்பாக, இஸ்ரேலிய மக்களை வீடு வீடாக புகுந்து கொலை செய்வது போன்ற வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இஸ்ரேல் மக்கள் சிலரை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசா பகுதிக்குள் புகுந்த இஸ்ரேல் ராணுவம், ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்தவர்களை கொன்று குவித்து வருகிறது. குறிப்பாக, காசாவில் இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் நடத்துவதால், அண்டை நாடுகளுக்கு மக்கள் அகதிகளாக குடிபெயர்ந்து வருகின்றனர்.

இதனிடையே, தங்கள் நாட்டு மக்களை விடுவிக்க வேண்டும் எனக் கூறி, காசாவில் வீடு, மின்சாரம், எரிபொருள், குடிநீர், மருந்து பொருட்கள் என அனைத்து அடிப்படை வசதிகளையும் இஸ்ரேல் தடை செய்து விட்டது. இதனால், அங்குள்ள மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தியாவசிய தேவைகளுக்கு தடை விதிக்க வேண்டாம் என இஸ்ரேலுக்கு பல்வேறு மனிதாபிமான அமைப்புகள் கோரிக்கை வைத்தன. ஆனால், இஸ்ரேல் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டது.

அதேவேளையில், ஹமாஸ் அமைப்புக்கு ஒரு நிபந்தனையை இஸ்ரேல் விதித்துள்ளது. அதாவது, தங்கள் நாட்டைச் சேர்ந்தவர்களை விடுவிக்காத வரையில் காசாவுக்கு மின்சாரம் மற்றும் குடிநீர் வழங்கப்பட மாட்டாது என்றும், எந்தவொரு எரிபொருள் வாகனமும் உள்ளே நுழைய முடியாது என்று கண்டிப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், அடுத்த 24 மணிநேரத்தில் வட காசாவில் உள்ள 10 லட்சம் மக்கள் துரிதமாக வெளியேற இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் மூலம், நாளை வடக்கு காசாவை குறிவைத்து மிகப்பெரிய தாக்குதலை நடத்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே, ஜோர்டான் மன்னர் மற்றும் பாலஸ்தீன அதிபருடன் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் சந்தித்துள்ளார். போர் தீவிரம் அடைந்து வரும் நிலையில் போர் நிறுத்தம் குறித்து விரைவில் பேச்சுவார்த்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இஸ்ரேல் பிரதமர், அதிபரை சந்தித்து இஸ்ரேலுக்கான தனது ஆதரவை ஆண்டனி பிளிங்கன் உறுதிப்படுத்தினார்.

Views: - 536

0

0