நைஜீரியா பள்ளியில் துப்பாக்கி முனையில் மாணவர்கள் கடத்தப்பட்ட சம்பவம்: 3 மாதங்களுக்கு பிறகு 100 பேர் விடுவிப்பு..!!
Author: Aarthi Sivakumar27 August 2021, 1:11 pm
அபுஜா: நைஜீரியாவில் கடந்த மே மாதம் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட 100க்கும் மேற்பட்ட மாணவர்களை கடத்தல் கும்பல் விடுதலை செய்துள்ளது.
நைஜீரியா நாட்டின் நைஜர் நகரில் தெகினா என்ற பகுதியில் சாலிகு டாங்கோ இஸ்லாமியா என்ற பள்ளி கூடமொன்று செயல்பட்டு வருகிறது. இஸ்லாமிய கல்வி அளிக்கப்படும் இந்த பள்ளி கூடத்திற்கு, கடந்த மே மாதத்தின் இறுதியில் திடீரென மோட்டார் சைக்கிள்களில் மர்ம நபர்கள் சிலர் வந்தனர். கைகளில் ஆயுதமேந்திய அவர்கள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தி அதிரடி தாக்குதலில் ஈடுபட்டனர்.
இந்த துப்பாக்கிச்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டார். இதனால், மாணவர்கள் அச்சத்தில் உறைந்து போயினர். இதன் பின்னர் மர்ம நபர்கள், அங்கிருந்த 136 மாணவர்களை கடத்தி சென்றனர்.
கடத்தப்பட்ட மாணவர்களை மீட்க நைஜீரிய பாதுகாப்பு படையினர் தீவிர முயற்சி செய்தனர். இதற்கிடையில், கடந்த ஜூன் மாதம் கடத்தல்காரர்களின் பிடியில் இருந்த 6 மாணவர்கள் உயிரிழந்துவிட்டனர். மேலும், 15 மாணவர்கள் கடத்தல்காரர்களிடம் இருந்து தப்பிவந்துவிட்டனர்.
இந்நிலையில், 3 மாதங்களுக்கு மேலாக தங்கள் பிடியில் இருந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்களை கடத்தல்காரர்கள் நேற்று விடுதலை செய்துள்ளனர். எத்தனை பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள் என்ற முழு விவரம் தற்போதுவரை வெளியாகவில்லை. ஆனால், கடத்தல்காரர்களின் பிடியில் தற்போது எந்த மாணவர்களும் இல்லை என இஸ்லாமிய பள்ளி தலைவர் அபுபக்கர் அல்ஹசன் தெரிவித்துள்ளார்.
இதனால், மொத்த மாணவர்களும் (விடுதலை செய்யப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
0
0