நம்ம நாட்டை நாம்தான் பாதுகாக்க வேண்டும்.. வாருங்கள், வந்து ஆயுதம் ஏந்துங்கள்… பொதுமக்களுக்கு உக்ரைன் அதிபர் அழைப்பு

Author: Babu Lakshmanan
24 February 2022, 4:33 pm
Quick Share

ரஷ்யா தாக்குதலில் நூற்றுக்கணக்கான வீரர்கள் உயிரிழந்த நிலையில், போரில் பங்கேற்க பொதுமக்களுக்கு உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார்.

முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா, உக்ரைன் நாட்டின் எல்லையில் சுமார் 2 லட்சம் படை வீரர்களை குவித்தது. இதற்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், படைகளை வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வந்தது. ஆனால், இதனை எல்லாம் பொருட்படுத்தாத ரஷ்யா அதிபர் புதின் , உக்ரைன் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டார்.

இதையடுத்து, உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா தாக்குதலை நடத்தி வருகிறது. சக்தி வாய்ந்த குண்டுகள் மற்றும் ஆயுதங்களால் உக்ரைன் நாட்டின் ராணுவ தளவாடங்கள் மற்றும் விமான தளங்களை ரஷ்ய படைகள் தாக்கி வருகின்றன. இதற்கு உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது. ரஷ்யாவின் 6 போர் விமானங்களையும், ஹெலிகாப்டரையும் வீழ்த்தி விட்டதாக உக்ரைன் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை இந்த தாக்குதலில் ரஷ்யா தரப்பில் இருந்து 50 வீரர்களும், உக்ரைன் தரப்பில் இருந்து 40 ராணுவ வீரர்கள் மற்றும் அப்பாவி பொதுமக்கள் 10 பேர் உயிரிழந்துள்ளனர். சில உக்ரைன் வீரர்கள் ரஷ்யாவிடம் சரணடைந்தும் வருகின்றனர்.

இதனிடையே, உக்ரைனில் தேசிய அவசர நிலை பிரகடனம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், உக்ரைன் குடிமக்கள் நாட்டை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்த பிரகடனம் 30 நாட்கள் அமலில் இருக்க உள்ளது.

இந்த நிலையில், ரஷ்ய படைகளுக்கு உக்ரைனால் ஈடுகொடுக்க முடியவில்லை. வீரர்களும் செத்து மடிந்து வருவதால், வயது வந்த ஆண்கள் அனைவரும், போரிலும், ராணுவ பணிகளிலும் ஈடுபட வேண்டும் என்று உக்ரைன் அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் பலர் சொந்த நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.

Views: - 1040

0

0