தமிழகத்தை போலவே கனமழையால் தத்தளிக்கும் இலங்கை… வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள்… முல்லைத்தீவில் 2600 பேர் பாதிப்பு…!

Author: Babu Lakshmanan
18 December 2023, 10:58 am
Quick Share

இலங்கையில் பெய்து வரும் கனமழை காரணமாக முல்லைத்தீவில் 880 குடும்பங்களை சேர்ந்த 2687 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற கனமழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் நிறைந்து வெள்ளம் பாய்கின்ற நிலையில், பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது பெய்கின்ற சிறிய மழைக்கு கூட மிக பெரிய அழிவுகளை எதிர் நோக்குகின்ற நிலைமைக்கு முல்லைத்தீவு மாவட்ட மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இவ்வாறான பின்னணியில் நேற்று மதிய வேளையில் திடீரென வந்த வெள்ளம் காரணமாக ஒட்டுசுட்டான் பிரதேசத்தின் புளியங்குளம், பண்டாரவன்னி உள்ளிட்ட கிராம மக்களின் வீடுகள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் பலர் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். இவர்களை ஒட்டுசுட்டான் பிரதேச செயலக அதிகாரிகள், கிராம அலுவலர்கள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், கிராம இளைஞர்கள், இராணுவத்தினர் இணைந்து மக்களை பாதுகாப்பாக மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைத்துள்ளனர்.

இதேபோன்று குளங்களுக்கான நீர்வரத்து மிக வேகமாக காணப்படுகின்ற நிலையில், பல்வேறு குளங்கள் உடைப்பெடுக்கும் அபாயத்தையும் எதிர்கொண்டுள்ளதோடு, வெள்ளநீர் மக்கள் குடியிருப்புகளுக்குள் செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளமையினால், மக்கள் மிக அவதானமாக செயல்படுமாறு முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை நேற்று மாலை 4 மணி வரையான தகவல் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவிலே அம்பாள்புரம், கரும்புள்ளியான், ஒட்டறுத்தகுளம், நட்டாங்கண்டல், பாண்டியன்குளம், செல்வபுரம், பாலிநகர், சிராட்டிகுளம், சிவபுரம், மூன்றுமுறிப்பு,பூவரசங்குளம்,விநாயகபுரம் ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த 283 குடும்பங்களை சேர்ந்த 942 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோன்று ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் மாங்குளம், பனிக்கன்குளம், பண்டாரவன்னி, இந்துபுரம், தட்டையர்மலை, புளியங்குளம், தச்சடம்பன், கூழாமுறிப்பு, கனகரத்தினபுரம், காதலியர்சமனங்குளம், தண்டுவான், ஒட்டுசுட்டான் ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த 166 குடும்பங்களை சேர்ந்த 556 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோன்று கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கள்ளப்பாடு, சிலாவத்தை, செல்வபுரம், வற்றாப்பளை , தண்ணிமுறிப்பு, முள்ளியவளை தெற்கு, கள்ளப்பாடு வடக்கு, கள்ளப்பாடு தெற்கு ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த 44 குடும்பங்களை சேர்ந்த 136 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோன்று, துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் அணிஞ்சியன்குளம்,உயிலங்குளம், தென்னியங்குளம், கோட்டைகட்டிய குளம், ஆலங்குளம், தேராங்கண்டல், கல்விளான், மல்லாவி,யோகபுரம் கிழக்கு, புகழேந்திநகர், பாரதிநகர், யோகபுரம் மேற்கு ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த 104 குடும்பங்களை சேர்ந்த 323 பேர் பாதிக்கப்பட்டுள்ளன.

இதேபோன்று புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர்கள் பிரிவில் புதுக்குடியிருப்பு மேற்கு, தேவிபுரம், மாணிக்கபுரம், உடையார்கட்டு வடக்கு, உடையார்கட்டு தெற்கு மற்றும் வள்ளிபுனம் ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த 283 குடும்பங்களை சேர்ந்த 730 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்த வகையிலே மொத்தமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 880 குடும்பங்களை சேர்ந்த 2687 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ பிரிவின் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட மாங்குளம் கிராம அலுவலர் பிரிவில் 5 குடும்பங்களை சேர்ந்த 21 பேரும் புளியங்குளம் கிராம அலுவலர் பிரிவில் 5 குடும்பங்களை சேர்ந்த 21 பேரும் பண்டாரவன்னி கிராம அலுவலர் பிரிவில் 63 குடும்பங்களை சேர்ந்த 201 பேருமாக 73 குடும்பங்களை சேர்ந்த 243 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு பிரதேச செயலாளர் உதவி பிரதேச செயலாளர் பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவு ஊழியர்கள் கிராம அலுவலர்கள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் மக்களுக்கான சமைத்த உணவு மற்றும் அத்தியாவசிய தேவைகளை ஏற்பாடு செய்து வழங்கி வருகின்றனர்.

Views: - 794

0

0