“என் தந்தைக்கு அவரும் ஒரு பிள்ளை” சிவாஜி குடும்பத்திற்கு மிகப்பெரிய உதவி செய்த கேப்டன் – பிரபு உருக்கம்!

Author: Rajesh
29 December 2023, 1:26 pm
vijayaknth prabhu
Quick Share

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில வருடங்களாகவே உடல்நலம் குன்றி வீட்டிலேயே முடங்கினார். நேற்று உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தேமுதிக தலைமை தெரிவித்தது. மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் வெண்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு சிகிச்சை கொடுக்கப்படுவதாக தெரிவித்தது.

vijayakanth---updatenews360

இதனிடையே, விஜயகாந்தின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், நேற்று 9 மணிக்கு மருத்துவ அறிக்கை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதையடுத்து காலை விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மியாட் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:- கேப்டன்‌ விஜயகாந்த்‌ அவர்கள்‌ நுரையீரல்‌ அழற்சி காரணமாக மருத்துவமனையில்‌ அனுமதிக்கப்பட்டு வென்டிலேட்டர்‌ ஆதரவுடன்‌ சிகிச்சை பெற்றிருந்தார்‌. மருத்துவ பணியாளர்களின்‌ கடின முயற்சி இருந்தபோதிலும்‌ அவர்‌ நேற்று காலை 28 டிசம்பர்‌ 2023 காலமானார்‌.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜயகாந்தின் உடல் இன்று மாலை சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடுகளும் தற்போது நடைபெற்று வருகின்றன. இன்று பிற்பகல் 1.30 மணி வரை விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட உள்ளது. அதன்பின்னர் தீவுத்திடலில் இருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு மாலை 5 மணியளவில் அடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜயகாந்தின் மரணம் ஒட்டுமொத்த தமிழக மக்களையும் மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது. குறிப்பாக அவர் பல பேருக்கு செய்துள்ள உதவிகள் குறித்து தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது இன்று திரைத்துறையில் மிப்பெரிய நடிகர்களாக இருந்து வரும் விஜய், தனுஷ் குடும்பம், வடிவேலு , சரத்குமார் என பல பேரை திரையில் ஜொலிக்க வைத்தவர் விஜயகாந்த்.

இந்நிலையில் விஜயகாந்த் செய்த பேருதவிகளை பட்டியலிட்டு அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள் பிரபலங்கள். அந்தவகையில் நடிகர் பிரபு தனது குடும்பத்தினருடன் வந்து விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தி கோஷமிட்டார். அப்போது பேசிய அவர், “என் தந்தை சிவாஜி கணேசன் இறந்த போது நான் ஊரில் இல்லை. அப்போது ஒரு மகன் ஸ்தானத்தில் இருந்துப் நான் என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அவை அனைத்தையும் முன் நின்று செய்தார் விஜயகாந்த். என் தந்தை சிவாஜிக்கு அவரும் ஒரு பிள்ளை தான்.

அதனால் தான் இன்று என் அண்ணன் விஜயகாந்துக்கு நான் குடும்பத்தோடு வந்து அஞ்சலி செலுத்தி உள்ளேன். எனவே தமிழ் மக்கள் மற்றும் திரையுலகம் என எல்லா இடத்திலும் அவரை பிடித்தவர்கள் மனதில் என் அருமை நண்பர் விஜயகாந்த் வாழ்ந்து கொண்டு தான் இருப்பார் என கூறிவிட்டு “கேப்டன்.. கேப்டன்” என்று பிரபு கோஷமிட்டு கலங்கினார். பிரபுவின் இந்த உணர்ச்சிபூர்வமான இறுதி அஞ்சலி எல்லோரையும் சிலிர்க்க வைத்தது.

Views: - 229

0

0