உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் சாப்பிடும் போது பேசும் பழக்கம்…!!!

Author: Hemalatha Ramkumar
1 July 2023, 4:58 pm
Quick Share

‘எவ்வாறு சாப்பிட வேண்டும்?’ ‘சாப்பிடும் போது என்னென்ன செய்யலாம்? என்னென்ன செய்யக்கூடாது?’ என்பது சார்ந்த கோட்பாடுகள் நிறையவே உள்ளன. ஆனால் இவை எதையும் பின்பற்றாமல் நாம் மிகவும் அலட்சியமான முறையில் செய்யக்கூடிய ஒரு சில விஷயங்கள் நம் உயிருக்கே ஆபத்தாக முடிந்து விடுகிறது. அந்த வகையில் பேசிக்கொண்டே சாப்பிடுவது எந்த அளவுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதை நாம் புரிந்து கொள்வோம்.

நம்மில் பலருக்கு சாப்பிடும் போது பேசும் பழக்கம் உண்டு. ஒரு சிலர் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டோ அல்லது ஏதாவது வேலை செய்து கொண்டோ சாப்பிடுவார்கள். கவனம் இல்லாமல் உணவை உட்கொள்வது மிகவும் ஆபத்தான விஷயம். அதனால் ஏராளமான பாதிப்புகள் ஏற்படலாம். காற்று செல்வதற்கு மூச்சுக்குழாயும், உணவு செய்வதற்கு உணவு குழாயும் ஆகிய இரண்டு வால்வுகள் நம் உடலுக்குள் உள்ளது.

பொதுவாக நாம் உணவை சாப்பிடும் பொழுது மூச்சுக்குழல் வழியாக சுவாசிப்போம். அதே உணவை நாம் விழுங்கும் நேரத்தில் மூச்சு குழாய் தாமாக மூடிக்கொள்ளும். உணவுக் குழாய் திறந்து உணவு அதன் வழியே குடலுக்கு செல்கிறது. இது இயற்கையாகவே நம் உடலில் அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால் நாம் வாயை மூடி சாப்பிடாமல், பேசிக்கொண்டே சாப்பிடும் பொழுது, நம்மை அறியாமலேயே வாய் மூலமாக காற்று நம் உடலுக்குள் செல்கிறது. வாயின் வழியே காற்று செல்லும் போது உணவும் காற்றும் சேர்ந்து உள்ளே செல்லும் சமயத்தில் உணவுக் குழாய் மற்றும் மூச்சு குழாய் ஆகிய இரண்டும் திறந்து விடுகிறது. ஆகையால் உணவுக் குழாய்க்குள் நுழைய வேண்டிய உணவானது தவறுதலாக மூச்சுக் குழாய்க்குள் நுழைந்து விடுகிறது.

இதனால் மூச்சு திணறல் உண்டாகிறது. ஆகவே உணவு தொண்டையில் அடைத்துக் கொண்டவுடன் இயற்கையாக நமக்கு இருமல் ஏற்படுகிறது. அதன் மூலமாக உணவு வாயின் வழியாக வெளியேறும். ஆனால் ஒருவேளை இருமல் வழியாக அந்த உணவு வெளியே வராத போது அது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தி விடும். இதனால் நமது சுவாசத்தில் தடை ஏற்படுகிறது.

வெறும் 30 நொடிகள் நமது மூளைக்கு ஆக்ஸிஜன் கிடைக்கவில்லை என்றாலே நமக்கு மயக்கம் ஏற்படும். ஆகவே மூச்சுத் திணறல் ஏற்பட்ட அடுத்த 30 வினாடிகளில் ஒரு நபர் மயங்கி விழுந்து விடுவார். அவருக்கு சரியான முதலுதவி கொடுக்காவிட்டால் அவர் இறந்து விடுவதற்கான வாய்ப்புகளும் உள்ளது.

இது போன்ற சமயத்தில் மூச்சு திணறலால் மயங்கி கிடக்கும் நபரின் மார்பில் கை வைத்து அழுத்த வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலமாக நுரையீரலில் இருக்கக்கூடிய காற்று வேகமாக வெளியேறி அடைப்பட்டுள்ள உணவு துகள்களை நீக்குவதற்கான வாய்ப்பு உள்ளது. மற்றொரு சிகிச்சையில் உணவு தொண்டையில் அடைத்துக் கொண்டால் இரு கைகளையும் முதுகின் பின்புறத்தில் அழுத்தி பிடித்துக் கொண்டு அந்த நபரின் வயிற்றில் கைகளை வைத்து நன்றாக அழுத்தம் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு செய்தாலும் தொண்டையில் சிக்கிக் கொண்டிருக்கும் உணவு வெளிவருதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே எப்பொழுதும் உணவை நன்றாக மென்று வாயை மூடி சாப்பிடுவது அவசியம். உணவை கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட வேண்டும். அவசர அவசரமாக வாயில் வைத்து அடைக்கக் கூடாது. இது போன்ற விஷயங்களை பின்பற்றினால் நாம் பலவிதமான பிரச்சனைகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Views: - 6813

0

0