அக்னி பாதை திட்டத்திற்கு எதிர்ப்பு… 2வது நாளாக ரயிலுக்கு தீவைப்பு…விதிகளை மாற்றி அறிவித்த மத்திய அரசு…!!

Author: Babu Lakshmanan
17 June 2022, 9:57 am
Quick Share

அக்னி பாதை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 2வது நாளாக போராட்டம் நடந்து வரும் நிலையில், அத்திட்டத்தில் மத்திய அரசு சில மாற்றங்களை அறிவித்துள்ளது

ராணுவம், விமானப்படை, கடற்படை உள்ளிட்ட இந்திய பாதுகாப்பு துறையில் 4 ஆண்டுகளுக்கு இளைஞர்களை தேர்வு செய்யும் அக்னி பாதை திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, 17.5 முதல் 21 வயதுள்ள இளைஞர்கள் இந்திய ராணுவத்தில் சேர தகுதியுடையவர்களாவார்.

இந்தத் திட்டத்திற்கு வடமாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. குறிப்பாக, ஐக்கிய ஜனதாதளம்-பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடக்கும் பீகாரில், ராணுவ வேலைவாய்ப்பை எதிர்நோக்கி உள்ள இளைஞர்கள் தொடர்ந்து போராட்டத்தில் குவித்து வருகின்றனர். பல இடங்களில் ரயில்களை மறித்து போராட்டம் நடத்தியதுடன், 2 ரயில்களுக்கும் தீவைக்கப்பட்டது. கல்வீச்சில் பெண் எம்.எல்.ஏ. காயமடைந்தார்.

இந்தநிலையில், அக்னிபத் திட்டத்தின் மூலம் ராணுவத்தில் சேரும் இளைஞர்களுக்கான வயது வரம்பு 23 ஆக உயர்த்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

மேலும், வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- அக்னி பாதை வீரர்களின் 4 ஆண்டு கால பணி முடிந்த பின்னர் அவர்களின் எதிர்காலம் உறுதி செய்யப்படும். வங்கிக்கடன் மற்றும் 12ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் ஆகியவற்றுடன், மத்திய ஆயுதப்படை மற்றும் மாநில காவல்துறையில் வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்கப்படும். கடந்த 2 ஆண்டுகளில் ஆட்சேர்ப்பு பணிகளை மேற்கொள்ள முடியாததால், நடப்பாண்டில் மட்டும் வயது வரம்பை 23 ஆக உயர்த்த முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Views: - 569

1

0