சந்திரயான் 3-ஐ கிண்டல் செய்த நடிகர் பிரகாஷ் ராஜ்… பதிலடி கொடுக்கும் நெட்டிசன்கள்… டுவிட்டரில் ரணகளம்..!!

Author: Babu Lakshmanan
21 August 2023, 6:55 pm
Quick Share

சந்திரயான் 3 விண்கலத்தை கிண்டல் செய்து பதிவிட்ட நடிகர் பிரகாஷ் ராஜை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்வதற்காக இந்தியாவின் இஸ்ரோ சார்பில் சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட இந்த விண்கலம், நாளை மறுநாள் நிலவில் தரையிறக்கப்படுகிறது. இந்த நிகழ்வு மட்டும் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டால், இந்திய விஞ்ஞானிகளின் மிகப்பெரிய சாதனையாகும்.

உலகமே இந்த நிகழ்வை உற்று நோக்கியிருக்கும் போது, பிரபல நடிகரான பிரகாஷ்ராஜ், தனது டுவிட்டர் பக்கத்தில் டீ ஆத்துவதுபோல் ஒருபடத்தை வெளியிட்டு, ”விக்ரம் லேண்டர் நிலவில் இருந்து எடுத்த முதல் படம்” என்ற கருத்தை கிண்டலாக பதிவு செய்துள்ளார். அவரது அந்தப் பதிவிற்கு டுவிட்டரில் நெட்டிசன்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைமையிலான அரசை தொடர்ந்து விமர்சித்து வரும் பிரகாஷ் ராஜ், சந்திரயான் விண்கலத்தை விமர்சித்திருப்பது கடும் எதிர்ப்புகளை கிளப்பியுள்ளது. சந்திரயான்-3 ஒட்டுமொத்த இந்தியாவிற்கான பெருமை என்றும், அரசியல் நோக்கத்தில் அவமரியாதை செய்யக்கூடாது எனவும், டிரோல் செய்யும்போது அரசியலுக்கும், நாட்டிற்கும் இடையிலான எல்லையை தெரிந்து கொள்ளுங்கள் என ஒருவர் பதிலடி கொடுத்துள்ளார்.

மற்றொருவரோ, ஒருவரை வெறுப்பதற்கும், நாட்டை வெறுப்பதற்கும் இடையில் வித்தியாசம் உள்ளதாகவும், உங்களுடைய இந்த கருத்தை பார்ப்பதற்கு கவலையாக இருப்பதாக மற்றொரு நெட்டிசன் கருத்து தெரிவித்துள்ளார்.

Views: - 895

15

9