பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணுக்கு செருப்பு மாலை… மொட்டை அடித்து ஊர்வலமாக அழைத்துச சென்ற பெண்கள்… தலைநகரில் கொடூரம்!!

Author: Babu Lakshmanan
27 January 2022, 5:36 pm
Quick Share

டெல்லி : கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணுக்கு செருப்பு மாலை அணிவித்து பெண்களே ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் ஒரு குறிப்பிட்ட சில நிமிடங்களுக்கு ஒருமுறை ஏதாவது ஒரு பெண் அல்லது குழந்தை பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்டு வருவதாக அதிர்ச்சி ரிப்போர்ட் உள்ளது. இதில், ஏதேனும் ஒரு சம்பவம் உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தும்.

அந்த வகையில், தலைநகர் டெல்லியில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட 20 வயது பெண்ணுக்கு செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக பெண்களே அழைத்துச் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

கஸ்தூரிபா நகரில் சட்டவிரோத மதுகடத்தல் கும்பல் 20 வயது பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். இதனை அங்கிருந்த பெண்கள் கைதட்டி ஆண்களை உற்சாகப்படுத்தியதாகவும், இந்த கொடூரத்திற்கு பிறகு அந்தப் பெண்ணை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களிலும் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதுமட்டுமில்லாமல், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு செருப்பு மாலை அணிவித்ததுடன், மொட்டை அடித்து, முகத்தில் கருப்பு பெயிண்ட்டை பூசி ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளனர்.

பெரும் பரபரப்பை ஏறபடுத்திய இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி மகளிர் ஆணையம் அளித்த புகாரின் பேரில் 4 பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணை டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மாலிவால் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார். அந்தப் பெண்ணுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரி கூறுகையில், “எனது சகோதரியை ஒருதலைப்பட்சமாக காதலித்து வந்த ஒருவர் அண்மையில் தற்கொலை செய்து கொண்டார். அதற்கு என் சகோதரிதான் காரணம் என்று கூறினர். அவர்கள் தான் தற்போது என் சகோதரியை இப்படி செய்துள்ளனர்,” எனக் கூறியுள்ளார்.

இதனிடையே, இந்த சம்பவம் வெட்கக் கேடானது? காவல்துறை கடுமையான நடவடிக்கையை உள்துறை அமைச்சகம் மற்றும் ஆளுநரை கேட்டுக் கொள்வதாக முதலமைச்சர் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

Views: - 1780

0

0