இந்தியாவுக்கு ‘பாரத்’ என பெயர் மாற்றுவது உறுதி.. ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி செய்த செயல்..!!

Author: Babu Lakshmanan
9 September 2023, 11:56 am
Quick Share

ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி செய்த செயலினால் இந்தியாவுக்கு பெயர் மாற்றம் செய்யப்படுவது உறுதியாகியுள்ளது.

மத்தியில் தொடர்ந்து இரு முறை ஆட்சியை பிடித்த பாஜகவுக்கு 2024ல் நடக்கும் நாடாளுமன்ற தேர்தல் மிகவும் சவால் நிறைந்ததாகும். பாஜகவை எப்படியாவது ஆட்சியை விட்டு அகற்ற வேண்டும் என்ற முடிவில் 26 எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து I.N.D.I.A. எனும் கூட்டணியை அமைத்துள்ளன. இந்தக் கூட்டணி கட்சிகள் 3 முறை கூடி ஆலோசனை நடத்தியுள்ளன. அடுத்த கூட்டத்தில் தொகுதி பங்கீடு பற்றி பேச இருப்பதாகக் கூறப்படுகிறது.

எதிர்கட்சிகளின் கூட்டணிக்கு I.N.D.I.A என பெயர் வைக்கப்பட்டிருப்பது பாஜகவுக்கு சற்று நெருடலை ஏற்படுத்தியுள்ளது. எனவே, நாட்டின் பெயரை இந்தியா என்பதற்கு பதிலாக பாரத் என பெயர் மாற்றம் செய்ய முடிவு செய்ததாக தகவல் வெளியாகியது.

இதனை பிரதிபலிக்கும் விதமாக, ஜி20 மாநாட்டையொட்டி குடியரசு தலைவர் வைக்கும் விருந்தில் பங்கேற்க வருமாறு அரசியல் தலைவர்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்பிதழில், பாரத் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இது எதிர்கட்சியினரிடையே கடும் விமர்சனங்களை எழச் செய்தது.

இந்த நிலையில், 2 நாட்கள் நடைபெறும் ஜி 20 உச்சி மாநாடு டெல்லியில் இன்று தொடங்கியது. அமெரிக்கா, கனடா, ஜப்பான் உள்ளிட்ட பல உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். ஜி 20 மாநாட்டில் பங்கேற்க பாரத் மண்டபம் வந்த உலக தலைவர்களை பிரதமர் மோடி வரவேற்றார். அதன் பின்னர் அனைவரும் மாநாட்டில் கலந்து கொள்ள சென்றனர்.

மாநாட்டில் பிரதமர் மோடி வரவேற்புரை நிகழ்த்தினார். ஜி 20 மாநாட்டில் கலந்து கொள்ளும் உலக தலைவர்களின் நாடுகளை குறிக்கும் வகையில் பெயர்பலகை வைக்கப்படும். அப்படி வைக்கப்பட்ட பெயர்பலகையில் பிரதமர் நரேந்திர மோடியின் முன் வைக்கப்பட்டுள்ள பலகையில் இந்தியா என்பதற்கு பதிலாக பாரத் என பெயர்ப்பலகை வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், இந்தியாவுக்கு பாரத் என பெயர் மாற்றம் செய்யப்படுவது உறுதியாகியுள்ளது.

Views: - 283

0

0