கேரளாவை புரட்டியெடுக்கும் கனமழை… 7 மாவட்டங்களுக்கு மீண்டும் ஆரஞ்ச் அலர்ட் ; பீதியில் மக்கள்..!!

Author: Babu Lakshmanan
23 May 2024, 11:21 am
Quick Share

கேரள மாநிலத்தில் தொடர் கனமழை பெய்து வரும் நிலையில், 7 மாவட்டங்களுக்கு மீண்டும் ஆரஞ்ச் அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புயல் சுழற்சி மற்றும் வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதித்துள்ளது.

மேலும் படிக்க: சென்னைக்கு வந்த திடீர் போன் கால்… பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் ; பரபரப்பில் தமிழக காவல்துறை..!!

கனமழை மற்றும் மிக கனமழை பெய்யும் மாவட்டங்கள் குறித்த விவரங்களை இந்திய வானிலை ஆய்வு மையம் தினமும் அறிவித்து வருகிறது. அதனடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. நேற்று கொச்சி மற்றும் திருச்சூரில் பல மணி நேரம் தொடர்ந்து கனமழை பெய்ததன் காரணமாக, பிரதான சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. சாலையோரங்களில் நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான இருசக்கர வாகனங்கள் மழை வெள்ளத்தில் மூழ்கின.

அதேபோல, கோழிக்கோடு அரசு மருத்துவமனை வளாகத்துக்குள் மழை வெள்ளம் புகுந்தது. பெண்கள் மற்றும் குழந்தைகள் வார்டு, தீவிர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட இடங்களுக்குள் தண்ணீர் சென்றது. இதனால் நோயாளிகள், பணியில் இருந்த மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் அவதிக்குள்ளாகினர். இதுவரை கேரள மாநிலத்தில் மழைக்கு பலியானோர் எணணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் கேரளாவில் அனைத்து மாவட்டங்களிலும் இன்று பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு மற்றும் வயநாடு ஆகிய 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், மீதமுள்ள 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு இருக்கிறது. மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும், மறு உத்தரவு வரும் வரை கடலுக்கு செல்லக்கூடாது என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருக்கிறது.

Views: - 141

0

0