‘பார்த்து நொந்துட்டேன்… என்னை மன்னிச்சிடுங்க’ ; முகத்தில் சிறுநீர் கழித்த சம்பவம்… பாதிக்கப்பட்டவரை வீட்டிற்கு அழைத்து CM செய்த செயல்..!!

Author: Babu Lakshmanan
6 July 2023, 12:05 pm
Quick Share

மத்தியபிரதேசத்தில் முகத்தில் சிறுநீர் கழித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவரை தனது வீட்டிற்கே அழைத்து அவரது கால்களை முதலமைச்சர் சுத்தம் செய்த நிகழ்வு அரங்கேறியுள்ளது.

சித்தி மாவட்டம் சித்ஹி மாவட்டத்தில் சாலையோரம் பழங்குடியின தொழிலாளியான தேஷ்பத் ரவத் என்பவர் அமர்ந்திருந்தார். அப்போது, அந்த வழியாக குடிபோதையில் வந்த நபர், புகைபிடித்தவாறு தேஷ்பத் ரவத் முகத்தில் சிறுநீர் கழித்தார். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது.

இதனை தொடர்ந்து, இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுநீர் கழித்த நபர் குறித்து விசாரித்தனர். அதில், சிறுநீர் கழித்த நபர் அதே பகுதியை சேர்ந்த பர்வேஷ் சுக்லா என்பதும், இவர் பாஜகவைச் சேர்ந்தவர் என்பதையும் கண்டுபிடித்தனர்.

இதனிடையே, தலைமறைவான பாஜக நிர்வாகி பர்வேஷ் சுக்லாவை போலீசார் கைது செய்த நிலையில், அவரது வீட்டின் ஒரு பகுதியை அதிகாரிகள் நேற்று புல்டோசர் கொண்டு இடித்து தள்ளினர். மேலும், இந்த விவகாரத்தில் குற்றவாளி மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என மத்தியபிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்தார்.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பழங்குடி இளைஞரை போபாலில் உள்ள தனது இல்லத்திற்கு வரவழைத்து பேசிய முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அவரின் கால்களை சுத்தம் செய்து, மாலை சூட்டி மரியாதை செலுத்தினார். பின்னர், அந்த நபரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்ட முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், ‘அந்த வீடியோவைப் பார்த்து நான் வேதனைப்பட்டேன். நான் உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். மக்கள் எனக்கு கடவுள் போன்றவர்கள்,’ என்றார்.

Views: - 314

0

0