அம்பேத்கர் பெயர் வைத்ததால் கலவரம் : அமைச்சர் மற்றும் எம்எல்ஏ வீடுகளுக்கு தீ வைப்பு… 144 தடை உத்தரவு.. பதற்றத்தால் போலீசார் குவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
25 May 2022, 2:09 pm
Andhra Violence - Updatenews360
Quick Share

ஆந்திரா : புதியதாக பிரிக்கப்பட்ட மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயர் சூட்டியதால் அமைச்சர் மற்றும் எம்எல்ஏ வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டு கலவரம் வெடித்த நிலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆந்திராவின் கோனசீமா மாவட்டத்தின் பெயரை அம்பேத்கர் கோனசீமா மாவட்டம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து நேற்று பல்வேறு அரசியல் கட்சிகள், சங்கங்கள் ஆகியவை இணைந்து அமலாபுரம் நகரில் ஊர்வலம் நடத்தினர்.

கோனசீமா சாதனசமிதி என்ற அமைப்பின் பெயரில் மாவட்டத்தின் பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தப்பட நிலையில் நேற்று ஊர்வலத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். ஆனால் தடையை மீறி கோனசீமா சாதனசமிதி நடத்திய ஊர்வலம் கலவரமாக மாறியது.

கலவரத்தில் அமலாபுரம் நகரில் உள்ள ஆந்திர மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் விஸ்வரூப் வீடு மற்றும் மும்மடிவரம் எம்.எல்.ஏ பொன்னாட சதீஷ் வீடு அடித்து நொறுக்கப்பட்டு தீ வைக்கப்பட்டது.

மேலும் ஒரு போலீஸ் வாகனம் உட்பட மூன்று வாகனங்கள் எரிக்கப்பட்டன.
இதனால் அமலாபுரம் நகரில் நேற்று முதல் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில் நகரில் பதட்டத்தை தணிக்க பாதுகாப்பு பலப்படுத்தும் பொருட்டு இரவு முதல் மாவட்டத்தில் இணையதள சேவை நிறுத்தப்பட்டது. அமலாபுரம் நகரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமலாபுரம் நகருக்கு பேருந்து போக்குவரத்து தடை செய்யப்பட்டது. கோனசீமா மாவட்டம் முழுவதும் குறைந்த அளவில் மட்டுமே பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இதனால் பயணிகள் தீவிர சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

நேற்று நடந்த கலவரத்தில் கோணசீமா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.வி சுப்பாராவ் காயமடைந்ததை அடுத்து கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவர காக்கிநாடா மற்றும் ராஜமந்திரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் கூடுதலாக வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் பிற மாவட்டத்தில் இருந்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு போலீசார் மற்றும் மாநில போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

144 தடை உத்தரவு மற்றும் பலத்த போலீஸ் பாதுகாப்பு காரணமாக நேற்று கலவர பூமியாக காட்சியளித்தது அமலாபுரம் சாலைகள் இன்று காலை முதல் வெறிச்சோடி காணப்படுகிறது.

இந்த போராட்டம் மாவட்டத்தின் மற்ற பகுதிகளுக்குப் பரவாமல் தடுக்க மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வாகன தணிக்கையில் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கலவரம் மற்றும் 144 தடை உத்தரவு காரணமாக மாவட்டத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Views: - 661

0

0