50 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இலங்கை அணி… உலக சாதனை படைத்த சிராஜ் : இந்திய அணி அசத்தல்!!

Author: Udayachandran RadhaKrishnan
17 September 2023, 5:34 pm
50 - Updatenews360
Quick Share

16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 30-ந் தேதி தொடங்கியது. 6 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் லீக் சுற்று முடிவில் ஆப்கானிஸ்தான், நேபாளம் அணிகள் வெளியேற்றப்பட்டன.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய 4 அணிகள் சூப்பர்4 சுற்றுக்குள் நுழைந்தன. சூப்பர்4 சுற்று முடிவில் இந்தியா முதலிடமும், இலங்கை 2-வது இடமும் பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறின.இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா – இலங்கை அணிகள் மோதுகின்றன.

இதையடுத்து இறுதிப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இந்த நிலையில் மழை காரனமாக ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மழை நின்றதை அடுத்து ஆட்டம் ஆரம்பமானது.

இதில் ஆட்டம் தொடங்கிய முதல் ஓவரிலேயே பும்ரா குசல் பெராரே விக்கெட்டை வீழ்த்தினார். இதன் பின்னர் முகமது சிராஜ் வீசிய ஆடத்தின் 4-வது ஓவரில் இலங்கை அணி வீரர்கள் நிசாங்கா, சமரவிக்ரம, அசலன்கா மற்றும் தனஞ்சயா டி சில்வா 4 பேரின் விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார்.

மேலும் தனது அடுத்த ஓவரில் இலங்கை அணி கேப்டன் தசுன் ஷனகா விக்கெட்டை வீழ்த்தினார். இதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் குறைந்த பந்துகளில்(16 பந்துகள்) 5 விக்கெட்டுகள் வீழ்த்திய பந்து வீச்சாளர்கள் வரிசையில் சமிந்தா வாஸ் உடன் முதலிடத்தை பகிர்ந்துள்ளார்.

தொடக்கம் முதலே தடுமாறிய இலங்கை அணி வெறும் 15.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 50 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் இந்திய அணிக்கு 51 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்து வீசிய முகமது சிராஜ் 6 விக்கெட்டுகளும், ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட்டுகளும் மற்றும் பும்ரா 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.

Views: - 288

0

0