‘நம்ப வைத்து ஏமாத்துட்டீங்களே’… முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிர்ப்பு… திருவாரூரில் கொட்டும் மழையிலும் கோவனத்துடன் பிச்சை எடுத்து போராட்டம்!!

Author: Babu Lakshmanan
22 November 2023, 4:54 pm
Quick Share

தங்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை எனக் கூறி, முதலமைச்சர் ஸ்டாலினை கண்டித்து அவரது சொந்த ஊரான திருவாரூரில் 2000த்திற்கும் மேற்பட்ட மக்கள் நலப்பணியாளர்கள் கொட்டும் மழையினையும் பொருட்படுத்தாமல் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது திமுக தலைவரும், தற்போதைய முதல்வருமான ஸ்டாலின் பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார். அதன்படி, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கேஸ் மானியம் வழங்கப்படும், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும், அனைத்து மகளிருக்கான மகளிர் உரிமைத்தொகை, மக்கள் நலப்பணியாளர்களுக்கான பல வாக்குறுதிகள், அரசு ஊழியர்களுக்கான வாக்குறுதிகள் என பல்வேறு வாக்குறுதிளை அளித்து ஆட்சிக்கு வந்தார்.

ஆனால் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிக்கு வந்து இரண்டாரை ஆண்டுகளுக்கு மேலாகியும், 30 சதவீத வாக்குறுதிகளை கூட நிறைவேற்றாமல் அனைத்து தரப்பினரையும் ஏமாற்றி விட்டதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி போராட்ட களத்தில் இறங்கி வருகின்றனர்.

அந்த வகையில், தமிழகம் முழுவதும் உள்ள 13,500க்கும் மேற்பட்ட மக்கள் நலப்பணியாளர்கள் மற்றும் அவரது குடும்பத்தாரை ஏமாற்றி அவர்களது வாக்குகளைப் பெற, 2021 சட்டமன்ற தேர்தலின்போது, பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், பணிபாதுகாப்பு என வாக்குறுதிகளை அளித்ததை நம்பி வாக்களித்து ஏமாற்றப்பட்டுவிட்டதாக மக்கள் நலப்பணியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தற்போது பிச்சை எடுக்கும் நிலைக்கு மக்கள் நலப்பணியாளர்களை முதல்வர் ஸ்டாலின் ஆளாக்கிவிட்டார் என்பதை முன்வைத்து, அவரது தந்தையும், முன்னாள் முதல்வர் மறைந்த கருணாநிதியின் சொந்த ஊரான திருவாரூரில் தமிழகம் முழுவதுமிருந்து 2000த்திற்கும் மேற்பட்ட மக்கள் நலப்பணியாளர்கள் திருவாரூரில் விஜயபுரம் கடைவீதி, பேருந்து பயணிகள் என பலதரப்பினரிடம் கையில் தட்டு ஏந்தி, இடுப்பில் கோவனத்துடன் கையில் தட்டு ஏந்தி போராட்டம் நடத்தினர்.

கொட்டும் மழையினையும் பொருட்படுத்தாமல் முதல்வர் ஸ்டாலினை கண்டித்து பிச்சை எடுத்து சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், பெண்கள் புடவையில் மடிபிச்சை எடுத்தும், கைகுழந்தைகளுடன் பிச்சை எடுத்தும் முதல்வர் ஸ்டாலினின் பொய்யான தேர்தல் வாக்குறுதிகளால் ஏமாற்றப்பட்டதை பொதுமக்களுக்கு பிச்சை எடுப்பு போராட்டம் மூலம் மக்கள் நலப்பணியாளர்கள் கொண்டு சென்றனர்.

பின்னர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்து அவர்களுக்கு தங்க இடம் அளிக்காமல் வெகுநேரம் மழையிலேயே நிற்கவைத்து அவதிக்கு ஆளாக்கினர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளர்கள் திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் போலீஸாருக்கும், மக்கள் நலப்பணியாளர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

இதனை அடுத்து, காவல்துறையினர் அருகில் உள்ள திருமண மண்டபத்திற்கு கைது செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளர்களை கொண்டு சென்றனர்.

Views: - 358

0

0