மரம் மீது கார் மோதி கோர விபத்து : 4 பேர் பலி… திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட நிலையில் அழைப்பிதழ் கொடுக்க சென்ற போது சோகம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
13 November 2023, 11:45 am
Accident - Updatenews360
Quick Share

மரம் மீது கார் மோதி கோர விபத்து : 4 பேர் பலி… திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட நிலையில் அழைப்பிதழ் கொடுக்க சென்ற போது சோகம்!!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த புள்ளப்ப நாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் கீர்த்திவேல் துரை இவர் அங்காளம்மன் கோயில் பூசாரியாக உள்ளார்.

இவரது நண்பர்களான ஏளூரைச் சேர்ந்த மயிலானந்தன், சதுமுகையைச் சேர்ந்த பூவரசன், ராகவன் ஆகியோர் சத்தியமங்கலம் – கோவை சாலையில் நேற்று நள்ளிரவில் காரில் பயணித்துள்ளனர்.

காரை பங்களாபுதூரைச் சேர்ந்த இளையராஜா என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது கோவை சாலையில் உள்ள வேடசின்னானூர் பேருந்து நிறுத்தம் அருகே கார் வந்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த புளியமரத்தின் மீது கார் மோதியுள்ளது.

இதில் பலத்த காயமடைந்த கீர்த்திவேல் துரை, மயிலானந்தன், பூவரசன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த ராகவன் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் பலத்த காயமடைந்த கார் ஓட்டுநர் இளையராஜா, சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து சத்தியமங்கலம் காவல் ஆய்வாளர் முருகேசன் தலைமையிலான போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விபத்து குறித்து காவல்துறையினர் தெரிவிக்கையில் விபத்தில் உயிரிழந்த கீர்த்திவேல் துரைக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்த நிலையில், நண்பர்கள் ஒன்றிணைந்து பத்திரிக்கை கொடுக்க காரில் பயணித்துள்ளதாகவும், விபத்தில் உயிரிழந்த மயிலானந்தன் பனியன் நிறுவன தொழிலாளியாகவும், பூவரசன் சென்னையில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றிலும், ராகவன் ஓட்டுநராகவும் பணிபுரிந்து வந்ததாகவும்
இந்த விபத்துக்கான காரணம் குறித்து தற்போது விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Views: - 308

0

0