இரவு நேரத்தில் அரசு பேருந்தை வழிமறித்த ஒற்றை யானை : கண்ணாடியை சேதம் செய்து ஆக்ரோஷம்.. வைரலாகும் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
8 July 2022, 1:53 pm
Elephant - Updatenews360
Quick Share

ஈரோடு : சத்தியமங்கலம் அடுத்த ஆசனூர் அருகே இரவு நேரத்தில் அரசு பேருந்தை வழிமறித்த ஒற்றைக்காட்டு யானை பேருந்தின் முன் பக்கத்தை சேதம் செய்ததால் பயணிகள் அச்சமடைந்தனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. இவை அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையோரம் நிற்பதும், சாலையை கடப்பதும் வாடிக்கையாக்கி வருகின்றன.

கடந்த சில நாட்களாக தாளவாடி மலைப்பகுதியில் இருந்து கரும்பு பாரம் ஏற்றி வரும் லாரிகளை குறிவைத்து யானைகள் சாலையிலேயே முகாமிட்டுள்ளன. இந்நிலையில் நேற்று இரவு சத்தியமங்கலத்தில் இருந்து மைசூருக்கு திம்பம் மலைப்பாதை வழியாக ஆசனூர் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தபோது ஆசனூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை திடீரென பேருந்தை வழிமறித்து நின்றது.

பின்னர் பேருந்தின் முன்பக்கம் இருந்த கண்ணாடி மற்றும் இடது பக்கத்தில் உள்ள தகரம் ஆகியவற்றை தனது தும்பிக்கையால் அடித்து சேதம் செய்தது. இதனால் பேருந்தின் உள்ளே அமர்ந்திருந்த பயணிகள் மிகவும் அச்சத்துக்குள்ளாகினர்.

பின்னர் சிறிது நேரம் கழித்து யானை வனப்பகுதிக்கு சென்றது. இந்த காட்சிகளை பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

Views: - 690

0

0