தாய்மாமன் சீர் சொமந்து வாராண்டி… 15 மாட்டு வண்டிகளில் வந்த சீர்வரிசை.. கிராமத்தையே கலக்கிய தாய் மாமன்கள்..!!

Author: Babu Lakshmanan
10 July 2023, 7:16 pm
Quick Share

புதுக்கோட்டை மாவட்டம் மாங்காட்டில் நடைபெற்ற காதணி விழாவிற்கு தாய் மாமன்கள் பத்திற்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் பாரம்பரிய முறைப்படி சீர் கொண்டு வந்த நிகழ்வு காண்போரை வியக்க வைத்தது.

புதுக்கோட்டை மாவட்டம் மாங்காடு கிராமத்தைச் சேர்ந்த பொறியாளர் இளையராஜா – நவநீதா தம்பதிகளின் குழந்தைகள் ரிக்க்ஷனா ,சுதிக்சன் ஆகியோரது காதணி விழா இன்று மாங்காடு முத்துமாரியம்மன் கோயில் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த விழாவை முன்னிட்டு குழந்தைகளின் தாய் மாமன்களான அனவயல் ஆண்டவராயபுரத்தை சேர்ந்த நவீன் சுந்தர் மற்றும் நவசீலன் ஆகியோர் பாரம்பரிய முறைப்படி பத்திற்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் அணிவகுத்து வந்தனர்.

செண்டை மேளம் முழங்க பெண்கள் இனிப்பு, பழங்கள், பூக்கள் உள்ளிட்ட தட்டு தாம்பலங்களை ஏந்திய படியும், ஆண்கள் ஆடு, மிதிவண்டி, பைக் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை பிடித்த படியும், ஊர்வலமாக வந்து சீர் செய்த நிகழ்வு காண்பவரே கடந்த காலத்திற்கே அழைத்துச் சென்றது.

அதன்பின், சீர் வரிசை பொருட்களை மேளதாளங்கள் முழங்க, பட்டாசு வெடி சட்டத்தோடு, மண்டபத்திற்குள் எடுத்துச் சென்ற தாய்மாமன்கள் தங்களது மடியில் வைத்து குழந்தைகள் ரிக்க்ஷனா, சுதிக்சன் ஆகியோருக்கு காதுகுத்தி மகிழ்ந்தனர்.

குழந்தைகளின் தாய் வழி தாத்தா மாயழகு கடந்த காலத்தில் மாட்டு வண்டி ஓட்டி விவசாயம் செய்து, அதன் மூலம் கிடைத்த வருமானத்தில், தனது மகள் நவநீதா மற்றும் மகன்கள் நவீன் சுந்தர் நவசீலன் ஆகியோரை வளர்த்து படிக்க வைத்து, திருமணமும் செய்து அவர்கள் மகிழ்ச்சியோடு, வாழ வழிவகை செய்ததாக தெரிவிக்கின்றனர்.

எனவே, தங்களது தந்தையின் முன்னேற்றத்திற்கு காரணமாக இருந்த மாட்டு வண்டியின் பெருமையை இன்றைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்லும் வகையிலும், தமிழர்களின் பாரம்பரியத்தை காக்கும் வகையிலும் மாட்டு வண்டியில் சீர்கொண்டு வந்து காதணி விழாவை சிறப்பித்ததாக குழந்தைகளின் தாய் மாமன்கள் நெகிழ்வோடு தெரிவித்தனர்.

Views: - 229

0

0