காதல் திருமணம் செய்த மகளையும், மருமகனையும் காருடன் கடத்திய திமுக பிரமுகர் : போலீசில் தாய் புகார்!!

Author: kavin kumar
2 February 2022, 6:32 pm
Quick Share

கடலூர் : கடலூர் அருகே காதல் திருமணம் செய்த தம்பதியினரை கடத்தி சென்றதாக திமுக பிரமுகர் மீது மகனின் தாய் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே பாச்சாரப்பாளையம் பகுதியை சேர்ந்த தனஞ்செயன் என்பவரின் மகன் தாமரைக்கண்ணன் (25). இவர் சென்னையில் கடந்த சில மாதங்களாக தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், தாமரைக்கண்ணன் அதே பகுதியைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், திமுக பிரமுகருமான மு.அருள்முருகனின் மகள் மகாலட்சுமியை காதலித்து வந்துள்ளார். ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாக இருந்த போதிலும் பெண்ணின் வீட்டில் எதிர்ப்பு இருந்து வந்தாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த 27 ஆம் தேதி அன்று இருவரும் திருமணம் செய்துக் கொண்டனர். அதன் பின்னர், காதல் தம்பதியினர் பாதுகாப்பு கேட்டு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து வடலூர் காவல் நிலைய காவல் துறையினர் இரு வீட்டாரையும் அழைத்து சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். எனினும், அந்த தம்பதியினர் சென்னைக்கு சென்று பாஜக தலைவர் அண்ணாமலையிடம் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில், தம்பதியினர் கடந்த 31 ஆம் தேதியன்று சென்னையில் இருந்து காரில் புறப்பட்டு கடலூர் நோக்கி வந்துள்ளனர்.

அப்போது அவர்களை மரக்காணம் அருகே பெண் வீட்டு தரப்பினர் மடக்கி காருடன் கடத்திச் சென்று விட்டதாகவும், இந்த சம்பவம் குறித்து தாமரைக்கண்ணனின் தாயார் பாக்கியம் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுலவகத்தில் புகார் அளித்தார். அதில், பெண்ணின் தந்தையும் திமுக பிரமுகர் ஆன அருள்முருகன் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் இதற்கு முன்னதாக, மகாலட்சுமியை காணவில்லை என்று அருள்முருகனும் புகார் அளித்தி இருந்தது குறிப்பிடத்தக்கது பின்னர் புதிதாக திருமணம் ஆன தங்களது மகனையும், மகனின் மனைவியையும் உடனடியாக மீட்டு தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Views: - 1350

0

0