கணவரை பிரிந்து வாழ்ந்த பெண் மீது ஆசிட் வீச்சு: குற்றவாளியை பிடிக்க 3 தனிப்படை…கோவையில் அதிர்ச்சி..!!
Author: Aarthi Sivakumar7 January 2022, 12:20 pm
கோவை: கோவையில் கணவரை பிரிந்து வாழ்ந்த பெண் மீது மர்ம நபர் ஒருவர் ஆசிட் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தர்மபுரியை சேர்ந்தவர் ஸ்டாலின் இவரது மனைவி ராதா(34). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். ராதாவுக்கும் அவரது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து ராதா தனது கணவரை பிரிந்து 8 மாதங்களுக்கு முன்பு கோவைக்கு வந்துள்ளார்.
பின்னர் அம்மன் குளம் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்து கட்டிட வேலைக்கு சென்று வந்தார். இந்நிலையில், நேற்று மாலை வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய ராதா அந்தப் பகுதியில் உள்ள மளிகை கடைக்கு பால் வாங்குவதற்காக சென்றுள்ளார். பின்னர் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
வீட்டின் அருகே சென்றபோது இருட்டான பகுதியில் மர்மநபர் ஒருவர் ராதாவின் முகத்தில் ஆசிட்டை வீசிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதில் ராதாவின் இடது பக்க முகம், தோள்பட்டை, இடதுகை ஆகிய இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதனை பார்த்த அந்த வழியாகச் சென்றவர்கள் ராதாவை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண் மீது ஆசிட்டை வீசி சென்ற மர்ம நபரை தேடி வருகிறார்கள். மேலும், மர்மநபமர்ம நபரை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
குடியிருப்பு பகுதியில் பெண் மீது மர்மநபர் ஆசிட் வீசிய சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
0
0