மயில்சாமி உடலுக்கு கிடைத்த பாக்கியம்… கண்கலங்கிய குடும்பத்தினர் ; நெகிழ்ந்து போன நண்பர்கள்..!!

Author: Babu Lakshmanan
20 February 2023, 5:15 pm
Quick Share

மறைந்த நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் உடலுக்கு கிடைத்த பாக்கியத்தால் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் கண்கலங்கினர்.

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான மயில்சாமி, நேற்று அதிகாலை 3.30 அளவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். 57 வயதாகும் மயில்சாமி சிறிய பெரிய வேடங்களில் என சுமார் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கமலின் அபூர்வ சகோதரர்கள், ரஜினியின் பணக்காரன் உள்ளிட்ட எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார்.

இவரது திடீர் மறைவு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சென்னை சாலிகிராமத்தில் வைக்கப்பட்டுள்ள மயில்சாமியின் உடலுக்கு திரையுலகினர், அரசியல் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மயில்சாமியின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினர். பின்னர் மயில்சாமியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இந்த நிலையில், மாரடைப்பால் உயிரிழந்த பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் உடல், சிவ வாத்தியங்கள் முழங்க நடைபெற்ற இறுதி ஊர்வலத்திற்கு பிறகு, வடபழனி மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இருந்து பூஜிக்கப்பட்ட வெட்டிவேர் மாலை மயில்சாமி உடலுக்கு அணிவிக்கப்பட்டது. முன்னதாக சிவாச்சாரியார்கள் மூலம் திருவாசகம் திருமுறையில் உள்ள சிவபுராணம் பாடப்பட்டது. மேலும் சிவ வாத்தியம் முழங்க இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் மீது அதீத பக்தி கொண்டவர் நடிகர் மயில்சாமி என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு மயில்சாமி செய்த நற்செயல்கள் நினைவு கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Views: - 289

0

0