தஞ்சையில் அதிமுக பிரமுகர் வெட்டிக்கொலை.. அனைத்து கடைகளும் அடைப்பு ; . திருக்காட்டுப்பள்ளியில் பதற்றம்..

Author: Babu Lakshmanan
16 August 2023, 2:05 pm
Quick Share

தஞ்சையில் அதிமுக பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருக்காட்டுப்பள்ளி பழமார்நேரி சாலை பகுதியை சேர்ந்தவர் பிரபு (38). இவருக்கு சரண்யா என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். இவர் அதிமுகவில் நகர இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளராகவும் இருந்து வந்தார். 2021ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இருப்பினும், அதிமுகவிலும், வணிகர் சங்க பேரமைப்பிலும் தீவிரமாக பணியாற்றி வந்தார்.

தேர்தல் சமயத்தில் நடந்த முன்விரோதம் காரணமாக 2022ம் ஆண்டு நடந்த பாரதிராஜா என்பவரை தாக்கிய வழக்கில் பிரபுவும் சிறை சென்று வெளியே வந்தார். இந்த நிலையில், நேற்று இரவு பழமார்நேரி சாலையில் உள்ள தனது அண்ணன் வீட்டுக்கு அருகில் இருந்த கடையில் அமர்ந்திருந்தார். அப்போது, பைக்கில் வந்த 4 பேர் கண்ணிமைக்கும் நேரத்தில் இறங்கி, தாங்கள் கொண்டு வந்திருந்த பயங்கர ஆயுதங்களால் பிரபுவை சரமாரியாக வெட்டினர். இதில், பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனிடையே, கொலை செய்யப்பட்ட பிரபுவின் மனைவி சரண்யா திருக்காட்டுப்பள்ளி போலீசில் புகார் செய்தார். பழமார்நேரி சாலையில் உள்ள பாரதிராஜாவுக்கும், தனது கணவருக்கும் இடம் குறித்து பிரச்சனை இருந்து வந்ததாகவும், பாரதிராஜா, மணிகண்டன், ரமேஷ் ,மஸ்தான் என்கிற நாகராஜ் ஆகிய 4 பேரும் சேர்ந்து கணவரை வெட்டி கொலை செய்து விட்டதாகவும் புகார் அளித்திருந்தார்.

இதனிடையே, பிரபுவின் கொலை சம்பவத்தை கண்டித்து திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி பகுதியில் இன்று அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது. இதன்காரணமாக, திருக்காட்டுப்பள்ளி நகரில் பதட்டமான ஒரு சூழ்நிலை நிலவி வருகிறது.

Views: - 300

0

0