தமிழகத்தில் ரூ.36,000 கோடி முதலீடு செய்ய ஒப்பந்தங்கள் கையெழுத்து.. எந்தெந்த நிறுவனங்களுடன் ஒப்பந்தம்? முழு விபரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
7 January 2024, 12:15 pm
tn
Quick Share

தமிழகத்தில் ரூ.36,000 கோடி முதலீடு செய்ய ஒப்பந்தங்கள் கையெழுத்து.. எந்தெந்த நிறுவனங்களுடன் ஒப்பந்தம்? முழு விபரம்!!

உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியது. இன்றும் நாளையும் உலக முதலீட்டாளர் மாநாடு சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெறுகிறது. உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் ரூ. 5.50 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்க அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு ஜல்லிக்கட்டு காளை சிலையை முதலமைச்சர் வழங்கினார். மேலும், மேடையில் இருந்த முதலீட்டாளர்களுக்கும் ஜல்லிக்கட்டு காளை வடிவ சிலையை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வழங்கினார்.

உலக முதலீட்டாளர் மாநாட்டில் தொழில் நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி வருகிறது. உலக முதலீட்டாளர் மாநாட்டில் பல்வேறு நிறுவனங்களுக்கு காணொளிகள் மூலம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் இதுவரை ரூ. 36,000 கோடி முதலீடு செய்ய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது என கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் கடந்தாண்டு ரூ.20,000 கோடி செய்த ஹூண்டாய் நிறுவனம் கூடுதலாக ரூ.6000 கோடி முதலீடு செய்ய உள்ளதாக சென்னையில் நடக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் அறிவித்துள்ளது. இந்த மாநாட்டில் பேசிய அந்நிறுவன இந்திய நிர்வாக அதிகாரி தமிழ்நாட்டுக்கும் ஹூண்டாய் நிறுவனத்துக்கும் நீண்ட கால தொழில் தொடர்பு உள்ளதாகவும், ஹைட்ரஜனில் இயங்கும் வாகனங்களை தயாரிக்க தமிழ்நாட்டில் விரைவில் தொழிற்சாலையை அமைக்கப்படும் என தெரிவித்தார்.

கிருஷ்ணகிரியில் உள்ள தனது எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி ஆலையை ரூ.12,082 கோடி மதிப்பில் விரிவாக்கம் செய்கிறது. டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம். 40,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் கோத்ரெஜ் நிறுவன உற்பத்தி ஆலை அமைக்க அரசுடன் புரிந்துணர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ரூ.515 கோடியில் அமைக்கப்படும் ஆலை மூலம் 446 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் கோத்ரேஜ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

குவால்காம் நிறுவனத்துடன் அரசு ஒப்பந்தம் செய்து உள்ளது. அதன்படி குவால்காம் நிறுவனம் ரூ.177.27 கோடி முதலீடு செய்ய உள்ளதாகவும் இதன்மூலம் 1600 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TVS குழுமம் ரூ. 5000 கோடியில் ஆலையை விரிவாக்கத்திற்கு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. டிவிஎஸ் நிறுவனம் ஆலையை விரிவுபடுத்துவதன் மூலம் 500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க உள்ளது.

பெகட்ரான் நிறுவனம் ரூ.1000 கோடியில் ஆலையை விரிவாக்கத்திற்கு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. பெகட்ரான் நிறுவனம் விரிவாக்கம் மூலம் 8,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க உள்ளது. செல்போன் அல்லாத பிற மின்சாதன உற்பத்தியை பெகட்ரான் நிறுவனம் தொடங்குகிறது.

தூத்துக்குடியில் ரூ.16,000 கோடி முதலீட்டில் மின்சார வாகனம் மற்றும் பேட்டரி உற்பத்தி ஆலையை அமைக்க வியட்நாமைச் சேர்ந்த VinFast நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.

JSW நிறுவனம் ரூ. 10,000 கோடி முதலீடு செய்யவுள்ளதாகவும், JSW நிறுவனம் மூலம் 6600 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது.

அமெரிக்காவின் First Solar நிறுவனம் ரூ.5600 கோடி முதலீடு செய்யவும், மிட்சுபிசி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ரூ.200 கோடி முதலீடு செய்யவும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

Views: - 238

0

0