கோட்டை ஈஸ்வரன் அருளால் அசம்பாவிதம் தவிர்ப்பு… 31ம் தேதி கோவைக்கு நான் வருகிறேன்… அண்ணாமலை அறிவிப்பு

Author: Babu Lakshmanan
29 October 2022, 4:50 pm
Quick Share

கோவை : உக்கடம் கோட்டை ஈஸ்வரனை தரிசனம் செய்ய வருவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக கடந்த 23ம் தேதியன்று அதிகாலை மாருதி கார் வெடித்துச் சிதறியது. அதில் உக்கடம் ஜி.எம். நகர் பகுதியை சேர்ந்த ஜமேசா முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். கார் வெடித்து சிதறிய இடத்தில் ஆணிகள் கோழிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டன.

இது குறித்து உக்கடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் முபினிடம், 2019ம் ஆண்டு தேசிய பாதுகாப்பு முகமை அமைப்பினர் அவரிடம் விசாரணை நடத்தியதும் தெரியவந்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய 6 பேரை உபா சட்டத்தில் கைது செய்த போலீசார், இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, கோவை கார் வெடிப்பு சம்பவம் நடப்பதற்கு 5 நாட்களுக்கு முன்பாகவே, மத்திய உளவுத்துறை எச்சரித்தும், எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் தமிழக அரசு ஏன் எடுக்கவில்லை என்று பாஜக கேள்வி எழுப்பி வருகிறது. மேலும், மாநில உளவுத்துறை தோல்வியடைந்து விட்டதாகவும், இந்த கார் வெடிப்பு சம்பவத்தை தடுக்க தவறியதைக் கண்டித்து, கோவையில் 31ம் தேதி பாஜக சார்பில் பந்த் அறிவிக்கப்பட்டது.

ஆனால், இந்தப் பந்த்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, விசாரணைக்கு வந்த போது, தமிழக பாஜகவின் தலைமையால் இந்த பந்த் அறிவிக்கப்பட வில்லை என்றும், கோவை மாவட்ட பாஜகவினர் இந்த பந்த்-க்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர், கோவை மாவட்ட பாஜகவினர் அறிவித்த பந்த், தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், வரும் 31ம் தேதி உக்கடம் கோட்டை ஈஸ்வரனை தரிசனம் செய்ய வருவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “கோவையில் நடந்த தற்கொலை படை தாக்குதல் விபத்தாக மாறி பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது கோட்டை ஈஸ்வரன் அருளால். கோவை மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மூத்த தலைவர்களுடன் நாளை மறுநாள், அக்டோபர் 31ஆம் தேதி, நம்மைக் காத்து அருளிய கோட்டை ஈஸ்வரனை தரிசிக்க வருகிறேன்,” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Views: - 338

0

0