அன்னூர் பைனான்சியர் கொலை விவகாரத்தில் திருப்பம்: இந்து முன்னணி நிர்வாகி உட்பட 4 பேர் கைது…

Author: kavin kumar
29 January 2022, 6:51 pm
Quick Share

கோவை : அன்னூரில் பைனான்சியர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இந்து முன்னணி நிர்வாகி உட்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் அன்னூரை அடுத்துள்ள நாகம்மாபுதூர் பகுதியை சரவணன்(வயது 19). இவர் சிட்பண்ட்ஸ் நடத்தி வந்துள்ளார். இந்து முன்னணியில் இருந்து சில நாட்களுக்கு முன்னர் தான் திமுகவில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இவர் நேற்று அன்னூரை அடுத்துள்ள மைல்கல் பகுதியில் வசூலுக்காக நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த பிள்ளையப்பம்பாளையம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் தமிழ்ச்செல்வன் என்கிற பகவான்ஜி (26), மற்றும் அவரது நண்பர் ராஜராஜன் (20) இருவரும் கொடுங்கல், வாங்கலில் ஏற்பட்ட தகராறில் சரவணனை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.

இதில் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சரவணனை அருகில் இருந்த பொதுமக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சரவணன் வரும் வழியில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதைதொடர்ந்து சரவணனை வெட்டிய இருவரும் அன்னூர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். இந்நிலையில் கொலை செய்யப்பட்ட சரவணனின் முன்னாள் சிட்பண்ட்ஸ் உரிமையாளர்களான இந்து முன்னணியின் கோவை வடக்கு மாவட்ட செயலாளரான குட்டி என்ற ராஜேந்திரன்(40) மற்றும் அவரது பங்குதாரரான ரங்கநாதன்( 33) ஆகிஅயார் தொழில்போட்டி காரணமாக சரவணனை வெட்டிக்கொலை செய்துள்ளதாகவும்,

பைனான்ஸ் தொழிலில் ஈடுபட்டு வரும் தனது மகனுக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை இல்லை எனவும், அதனால் முன்னாள் சிட்பண்ட்ஸ் உரிமையாளர்களான இருவரையும் தீவிர விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி சரவணனின் உறவினர், நண்பர்கள் என 20 க்கும் மேற்பட்டோர் அன்னூர் டூ கோவை செல்லும் சாலையில் காவல் நிலையம் எதிரே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீசார் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த நிலையில் இக்கொலை சம்பந்தமாக தீவிர விசாரணை மேற்கொண்ட அன்னூர் போலீசார், கொலையில் ஈடுபட்ட தமிழ்ச்செல்வன், ராஜராஜன் மற்றும் கொலை செய்ய தூண்டுதலாக இருந்ததாக இந்து முன்னணியின் மாவட்ட செயலாளர் குட்டி என்ற ராஜேந்திரன், ரங்கநாதன் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

விசாரணையில் சரவணன் கொலை செய்யப்பட்டதில் தமிழ்ச்செல்வன், ராஜராஜன் இருவருக்கும் நேரடி தொடர்பிருப்பதும், இந்து முன்னணியின் மாவட்ட செயலாளர் குட்டி ராஜேந்திரன் மற்றும் பங்குதாரர் ரங்கநாதன் உள்ளிட்டோர் கொலை செய்ய தூண்டியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். இளைஞர் ஒருவர் பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இந்து முன்னணியின் கோவை மாவட்ட செயலாளர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அன்னூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 1350

0

0