G-Payயில் நூதன மோசடி… கவனமா இருங்க : எச்சரிக்கை கொடுக்கும் டிஜிபி!!

Author: Udayachandran RadhaKrishnan
9 March 2023, 2:00 pm
DGP - Updatenews360
Quick Share

வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக பரவிய வதந்தி பிரச்சனை விவகாரத்தில் தற்போது சாதார நிலைக்கு திரும்பி விட்டதாக தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரவியநிலையில், முதல்வர் உத்தரவின் பேரில் போலீசார் பல்வேறு கண்காணிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் மேற்கொண்டனர்.

மேலும் பீகார் மாநில அதிகாரிகள் தமிழகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில் கோவை மாவட்ட தொழில் அமைப்பினருடன் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு ஆலோசனை மேற்கொண்டார்.

கோவை மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மேற்கு மண்டல ஐஜி சுதாகர், கோவை மற்றும் சேலம் சரக டிஐஜிகள், 8 மாவட்ட எஸ்.பிக்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய டிஜிபி சைலேந்திரபாபு, கோவை சரகத்தில் உள்ள தொழில் முனைவோர், தொழில் அதிபர்களுடன் சந்தித்தோம். வதந்திகளால் ஏற்பட்ட குழப்பம் சரியான முறையில் கையாண்டதற்கு தொழில்துறையினர், ஊடகங்களுக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போது நிலைமை சரியாக இருக்கிறது. தொடர்ந்து இது போன்று சம்பவங்கள் நடக்காமல் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவங்கள் தொடர்பாக 3 பேர் கைது செய்யபட்டுள்ளனர்.

போபால், பாட்னா உட்பட பல இடங்களில் போலீசார் முகாமிட்டுள்ளனர். புலம் பெயர் தொழிலாளர்களுடன் தொடர்ந்து உரையாடல் வைத்துகொள்ளவும் அறிவுறுத்தபட்டுள்ளது.

அதற்கான வாட்ஸ் குழுக்களும் துவங்கப்பட்டுள்ளது. பீகார், ஜார்கண்ட் பகுதியை சேர்ந்தவர்களின் குடும்பத்தினர் அதிகளவு பயந்து போயுள்ளனர்.

அவர்கள் மொழியில் இது தவறானது என தகவல்களை தெரிவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. வைரல் வீடியோ தொடர்பாக இதுவரை 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹோலிபண்டிகைக்கு சென்ற தொழிலாளர்கள் 15 நாட்களில் திரும்ப வாய்ப்பு உள்ளது.

ரவுடிகள் மீதான துப்பாக்கி சூடு குறித்து கேட்ட போது போலீசார் களநிலவரத்துக்கு ஏற்றபடி பிரச்சனைகளை சமாளிக்க வேண்டியுள்ளது.

சில நேரங்களில் துப்பாக்கியை பயன்படுத்துவார்கள். சில நேரங்களில் லத்தியை பயன்படுத்துவார்கள், அவர்களது உயிரை காப்பாற்றிக் கொள்ள தற்காப்பு நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை வரும், களத்திற்கு ஏற்ப அவர்கள் செயல்படவேண்டியுள்ளது. சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்துபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

கூகுள் பே வில் உங்கள் கணக்கில் தொகையை போட்டு விட்டு, பின் லிங்க் அனுப்பி திருப்பி அனுப்ப சொல்லுவார்கள். அப்படி லிங்க் அனுப்பினால், அதில் சில தகவல் கேட்கும். அப்படி தகவலை தெரிவித்து விட்டால் உங்கள் கணக்கில் இருந்து முழு பணத்தையும் திருடி விடுவார்கள்.

அப்படி ஏதாவது லிங்க் வந்தால் அந்த எண்ணை பிளாக் பண்ணிவிட்டு, காவல் துறைக்கு தெரிவிக்க வேண்டும் என தெரிவித்தார்.

வீட்டைஉடைத்து திருடுவதில்லை. வங்கி கணக்கினை சீசனுக்கு ஏற்றபடி திருடுகின்றனர். ஒடிபி, வங்கி கணக்கு எண்ணை வங்கிகளில் இருந்து யாரும் கேட்கமாட்டார்கள் . ஓடிபி எண்ணை யாருக்கும் கொடுக்க கூடாது என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார்.

Views: - 446

0

0