வீட்டில் சுவர் மீது ஏறி குதித்து திருட முயற்சி… வீட்டு உரிமையாளரிடம் சரணடைந்த விநோத திருடன்!!

Author: Udayachandran RadhaKrishnan
11 March 2023, 4:58 pm
Theft -Updatenews360
Quick Share

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ராசி நகரில் உள்ள குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் சரண்யா (வயது 32). இவர் தனது மகன் லிசாந்த் (வயது 7) மற்றும் மாமியார் சுசீலா (வயது 56) ஆகியோருடன் வசித்து வருகிறார்.

சரண்யாவின் கணவர் ரமேஷ் (வயது 36) சிங்கப்பூரில் மெக்கானிக்கல் இன்ஜினியர் ஆக பணியாற்றி வருகிறார்.

பெண்கள் தனியாக இருக்கும் வீட்டை நோட்டமிட்டு திருடலாம் என குறிவைத்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வரை அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் சுற்றி நோட்டமிட்ட திருடர்கள் இந்த வீட்டை குறி வைத்துள்ளனர்.

நேற்று முன்தினம் பகலில் வீட்டின் முன்புறம் செல்லும் மூன்று இணையதள (இன்டர்நெட்) ஒயர்களை துண்டித்துள்ளனர். இதன் மூலம் சிசிடிவி கேமரா இணைப்பு துண்டிக்கப்படும் என நினைத்து, இந்த ஒயர்களை வெட்டி விட்டு, அதன் பிறகு அன்று இரவே வீட்டின் சுற்றுச்சுவரை ஏறி குதித்து ஒருவன் உள்ளே சென்றுள்ளான்.

வீட்டின் உள்ளே இருந்த சரண்யா தனது கைபேசியில் யாரோ மர்ம நபர் சுற்றுச்சுவரை ஏறி உள்ளே வருவது தெரிந்து, உடனடியாக அனைத்து விளக்குகளையும் எரிய விட்டுள்ளார். அருகாமையில் இருக்கும் வீடுகளுக்கும் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.

இது தெரிந்து கொண்ட திருடன் உடனடியாக வீட்டை சுற்றி பின்புறமாக சென்று மீண்டும் மதில் சுவர் ஏறி எட்டி குதித்து தப்பித்து சென்று விட்டான்.

அதன் பிறகு இந்த சிசிடிவி ஃபுட்டேஜ் பதிவில் திருடன் எட்டி குதித்து உலாவி சென்றது இருப்பதை உறவினர்கள் அனைவருக்கும் அனுப்பி, இவன் யாரென்று தெரிய வேண்டும் என்பதற்காக விசாரித்துள்ளனர்.

அப்பொழுது இந்த தகவலை தெரிந்து கொண்ட சூரி பள்ளம் என்ற பகுதியில் வசிக்கும் சென்ட்ரிங் கூலி தொழிலாளி பிரபு (வயது 26) இந்த தகவலை தெரிந்து கொண்டு, இன்று அதிகாலை சரண்யாவின் வீட்டுக்கு தாமாகவே முன்வந்து “நான்தான் சுற்றுச்சுவர் எறி குதித்தவன். என்னை மன்னித்து விடுங்கள். தயவு செய்து காவல் நிலையத்தில் புகார் தந்து விடாதீர்கள் என கெஞ்சியுள்ளார்.

உடனடியாக சரண்யா சத்தியமங்கலம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் வந்தனர். விசாரணையில் பிரபுவுடன் சேர்ந்து மேலும் இருவர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது.

இதனால் உடனடியாக பிரபுவை கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். பிரபு உடன் சம்பந்தப்பட்ட மேலும் இருவர் யார்? இதுபோன்ற எத்தனை குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளார்கள் என விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் இவனுடன் குற்றச் செயலில் ஈடுபட்ட பிரபுவின் கூட்டாளி, வடவள்ளி கிராமத்தை சேர்ந்த குமார் என்பவரை பொதுமக்களே தற்பொழுது பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.

வீட்டின் முன்பு வெட்டப்பட்ட இணையதள ஒயர்களையும் பறிமுதல் செய்துள்ளனர். பெண்கள் தனியாக இருந்த வீட்டை குறி வைத்து, திருட முயற்சித்த போது சிசிடிவி கேமராவில் பதிவாகி விட்டோம் என்ற பயத்தில் திருடனே தானே ஒப்புக்கொண்டு வீட்டு உரிமையாளரிடம் வந்து சரணடைந்த வினோதமான விஷயம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 374

0

0