பாரதியார் பல்கலை., மாணவிகள் விடுதிக்குள் மர்மநபர்கள் நடமாட்டம்: உள்ளூர் இளைஞர் கைது…விசாரணையில் வெளியான ‘திடுக்’ தகவல்..!!

Author: Rajesh
21 April 2022, 8:45 pm
Quick Share

கோவை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் உள்ள பெண்கள் விடுதியில் இரவு நேரத்தில் புகுந்து மாணவிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி வந்த இளைஞரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை மருதமலை அடிவாரத்தில் அமைந்துள்ள பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாணவிகள் தங்கும் விடுதியில் இரவு நேரத்தில் மர்ம நபர் நடமாடுவதாகவும், லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை திருட முயற்சிப்பதாகவும் மாணவிகள் குற்றம்சாட்டி வந்தனர்.

பாரதியார் பல்கலைக்கழகம்

பல்கலைக்கழக நிர்வாகமும், போலீசாரும் இந்த பிரச்சனையில் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி கடந்த 31ம் தேதி மாணவிகள் திடீர் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

மாணவிகள் போராட்டம்

இதனைத் தொடர்ந்து, அங்கு சென்ற போலீசார் மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். ஆனால், மீண்டும் மர்ம நபர் உலவுவதாக கூறி மாணவிகள் வீடியோ ஒன்றை வெளியிட்டனர்.

தொடர்ந்து பல்கலைக்கழக நிர்வாகத்தின் சார்பில் வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் கடந்த 10ம் தேதி வழக்குப்பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து மர்ம நபரை தேடி வந்தனர்.

இதனிடையே வியாழக்கிழமை அதிகாலை தனிப்படையினர் பல்கலைக்கழக வளாகம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித் திரிந்து கொண்டிருந்த கல்வீராம்பாளையத்தை சேர்ந்த சுரேந்தர் (19) என்பவரைப் பிடித்து விசாரித்த போது அவர் மாணவிகள் விடுதிக்குள் சுவர் ஏறி குதித்து சென்று லேப்டாப் திருட முயன்றதாக ஒப்புக்கொண்டார்.

தொடர்ந்து அவர் மீது இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Views: - 586

0

0