தொடர் வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த தனியார் டிவி நிருபர் உள்பட 2 பேர் கைது… 10 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்..!!

Author: Babu Lakshmanan
23 February 2023, 11:13 am
Quick Share

வேலூர் ; தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த தனியார் தொலைக்காட்சி நிருபர் உள்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள முக்கிய இடங்களில் தொடர் மோட்டார் சைக்கிள்கள் திருடுபோவதாக குடியாத்தம் காவல் நிலையத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்தது. இதைத் தொடர்ந்து, வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில் குடியாத்தம் DSP ராமமூர்த்தி தலைமையில் தனிப்படை போலீசார் குடியாத்தம் அரசு மருத்துவமனை தெரு, அண்ணா தெரு, முக்கிய இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

மேலும், இப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது ஒரு குறிப்பிட்ட நபர் இரு சக்கர வாகனங்களை திருடி செல்வது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, தனிப்படை போலீசார் குடியாத்தம் அரசு மருத்துவமனை பகுதியில் மறைந்து இருந்து கண்காணிப்பில் இருந்தபோது அந்த நபர் திருடும்போது சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர், தீவிர விசாரணை மேற்கொண்டதில் இவர் குடியாத்தம் பகுதியை சேர்ந்த தரணி என்பதும் திருடிய வாகனங்கள் அனைத்தும் தனியார் தொலைக்காட்சி நிருபர் (பாலிமர் டிவி) ஞானவேல் என்பவரிடம் திருடிய வாகனங்களை கொடுத்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

அதனை தொடர்ந்து, ஞானவேலை கைது செய்து குடியாத்தம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவரிடம் இருந்த 10 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்தனர். தொடர் இருசக்கர வாகனத்தில் ஈடுபட்ட தனியார் தொலைக்காட்சி நிருபர் கைது செய்த சம்பவம் குடியாத்தம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 645

0

0