புலியை கொன்று தோலை கடத்திய கும்பல் கைது : தொடர் புலி வேட்டையில் ஈடுபடும் வடமாநில மாஃபியாக்களுக்கு வலைவீச்சு..!!

Author: Babu Lakshmanan
23 February 2023, 11:59 am
Quick Share

ஈரோடு : சத்தியமங்கலத்தில் புலியை கொன்று அதன் தோல் மற்றும் நகங்களை கடத்தும் கும்பலை வனத்துறை போலீசார் கைது செய்துள்ளனர்.

சத்தியமங்கலம் அடுத்துள்ள அரசூர் கிராமத்தில் வெளி மாநிலத்தை சேர்ந்த சிலர் தங்கியிருந்தனர். சந்தேகப்படும் படி நடந்து கொண்டிருந்தவர்களிடம் மாறுவேடத்தில் சென்ற வனத்துறையினர் சோதனையிட்டனர். சாக்கு பையில் புலித்தோல், புலிநகம், புலி எலும்புகள் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. விசாரணையில், பஞ்சாப்பை சேர்ந்த ரத்னா (40), மங்கல் (28), கிருஷ்ணன் (59), ராஜஸ்தானை சேர்ந்த ராம் சந்தர் (50) என, தெரிய வந்ததை அடுத்து, அவர்களை கைது செய்து புலி தோல் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

தொடர் விசாரணையில், நீலகிரி மாவட்டம் குந்தா வனச்சரகத்திற்கு உட்பட்ட எடக்காடு அருகே அடர்ந்த வனப்பகுதியில் புலியை தாக்கி கொன்று புலி தோலை கடத்தியது விசாரணையில் தெரிய வந்தது. நீலகிரி மாவட்ட வன அலுவலர் கவுதம், உதவி வன பாதுகாவலர் சரவணன் மற்றும் சத்தியமங்கலம் வனத்துறை அதிகாரிகள் நான்கு பேரை புலியை கொன்ற இடத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.

உதவி வன பாதுகாவலர் சரவணன் கூறுகையில், வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் இது போன்ற சம்பவத்தில் ஈடுபட்டது முதல் முறையாகும். உள்ளூர் மக்களுடன் சேர்ந்து இந்த செயலில் ஈடுபட்டார்களா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறோம். கிராமங்களில் சந்தேகப்படும் படி நடந்து கொள்ளும் வட மாநிலத்தவர் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

இதனிடையே, நீலகிரி வனத்துறை சார்பில் புலித்தோலை விற்பனை செய்யும் வட மாநில மாபியா கும்பலை பிடிக்க தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 425

0

0