டிவி பார்த்துக் கொண்டிருந்த கஞ்சா வியாபாரி… திடீரென வீட்டுக்குள் புகுந்த கும்பல்… மனைவி கண்முன்னே நடந்த அதிர்ச்சி சம்பவம்.!!

Author: Babu Lakshmanan
27 September 2022, 1:04 pm
Quick Share

செங்கல்பட்டு : செங்கல்பட்டுவில் வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்த கஞ்சா வியாபாரியை மர்ம கும்பல் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மறைமலைநகர் அடுத்துள்ள தைலாவரம் பகுதியைச் சேர்ந்தவர் வைகோ எனும் சந்துரு (28). இவர் வினிதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கஞ்சா வியாபாரியான இவர் மீது 3 கொலை வழக்குகள், 6 கொலை முயற்சி வழக்குகள் உட்பட 18 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில், நேற்றிரவு தனது மனைவியுடன் சந்துரு வீட்டில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென 8 பேர் கொண்ட மர்ம கும்பல் வீட்டுக்குள் புகுந்து, சந்துருவை சரமாரியாக வெட்டினர். இதனை பார்த்த அவரது மனைவி அவர்களை தடுக்க முயன்றனர். ஆனால், அதனையும் மீறி சந்துருவின் கழுத்து, தலை உள்ளிட்ட இடங்களில் கொடூரமாக வெட்டினர். இதில் பலத்த காயம் அடைந்த சந்துரு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

கணவனை காப்பாற்ற முயன்ற சந்துருவின் மனைவி வினிதாவின் கையிலும் பலத்த வெட்டு விழுந்தது. இதன் பிறகு, அங்கிருந்து மர்ம கும்பல் தப்பியோடியது.

இது குறித்து தகவல் அறிந்து வந்த கூடுவாஞ்சேரி போலீசார், கொலையாளிகள் விட்டு சென்ற ஒரு மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

மேலும், இந்த கொலை சம்பவம் எதற்காக நடந்தது..? கஞ்சா விற்பனை தகராறில் கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வீடு புகுந்து மனைவி கண்முன் ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 413

0

0