அண்ணாமலைக்கு வருகைக்கு எதிர்ப்பு… திருத்தணி சர்ச்சில் 4 நாட்களுக்கு பிறகு வெடித்த மோதல் ; உறுப்பினர்கள் வாக்குவாதம்…!!

Author: Babu Lakshmanan
13 February 2024, 4:49 pm
Quick Share

திருத்தணியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு சி.எஸ்.ஐ. கிறிஸ்துவ ஆலயத்தில் வரவேற்பு அளித்ததற்கு கிறிஸ்துவ ஆலய உறுப்பினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சட்டமன்ற தொகுதியில் பிப்ரவரி 8ஆம் தேதி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என் மக்கள் என் மண் நடை பயணம் மேற்கொண்டார்.

அப்போது, திருத்தணி நகராட்சியில் அரக்கோணம் சாலையில் உள்ள சி.எஸ்.ஐ. கிறிஸ்துவ ஆலயத்தில் உள்ள உறுப்பினர்கள், தலைமை பாதிரியார்கள், அண்ணாமலையை அழைத்து கிறிஸ்துவ ஆலயத்தில் வரவேற்பு அளித்தனர். மேலும், சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டு சால்வை அணிவித்து அவருக்கு கிறிஸ்தவ பைபிள் புத்தகத்தை பரிசு வழங்கினார்.

இந்த நிகழ்வு நடந்து நான்கு நாட்களுக்குப் பிறகு, இதே கிறிஸ்துவ ஆலயத்தில் ஒன்று கூடிய மற்ற கிறிஸ்துவ உறுப்பினர்கள், அண்ணாமலைக்கு கிறிஸ்துவ ஆலயத்தில் வரவேற்பு அளித்தது மிகவும் தவறு என்றும், கிறிஸ்துவ ஆலயத்தில் மற்றவர்களை கேட்காமல் எப்படி வரவேற்பு அளிக்கலாம் என்று கிறிஸ்துவ பாதிரியார்கள் மற்றும் கிறிஸ்தவ ஆலயத்தின் நிர்வாகிகளை கடுமையாக விமர்சனம் செய்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

189 தொகுதிகளில் நடந்த யாத்திரையில் ஒரு சர்ச்சில் கூட அண்ணாமலையை வரவேற்காத போது, திருத்தணியில் உள்ள இந்த சர்ச்சில் மட்டும் வரவேற்பு அளித்தது ஏன்..? என்று கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பான வீடியோவை கிறிஸ்தவர்கள் சமூக வலைதளத்தில் அந்த கிறிஸ்தவ தேவாலய உறுப்பினர்கள் வைரல் ஆக்கி வருகின்றனர் இந்த சம்பவத்தால் திருத்தணியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Views: - 316

0

0