அட்ரஸ் கேட்பது போல வந்து அராஜகம்… தொழிலதிபரை கட்டையால் தாக்கிய கும்பல் ; கல்லூரி மாணவர்கள் உள்பட 4 பேர் கைது..!!

Author: Babu Lakshmanan
25 May 2023, 2:10 pm
Quick Share

கோவையில் தொழிலதிபரை தாக்கிய தனியார் கல்லூரி மாணவர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை சரவணம்பட்டி விநாயகபுரம் முருகன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மணி (எ) பெரியசாமி (50). இவர் சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இவரது வீட்டின் அருகில் வளர்மதி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று வளர்மதி, பெரியசாமியை செல்போனில் தொடர்பு கொண்டு எங்கள் வீட்டிற்கு முன்பாக 6 பேர் கொண்ட கும்பல் பிரச்சனை செய்து ரகளையில் ஈடுபடுவதாகவும், வந்து உதவி செய்யுமாறும் அழைத்துள்ளார்.

அதனைத்தொடர்ந்து, பெரியசாமி, வளர்மதி வீட்டிற்கு வந்து நீங்கள் யார்? இங்கு ஏன் வந்து பிரச்சனை செய்கிறீர்கள் என்று கேட்டபோது அவர்கள் வெற்றிவேல் என்பவரை தேடி வந்ததாக கூறியுள்ளனர்.

அதற்கு வெற்றிவேல் என்று யாரும் இங்கு இல்லை, நீங்கள் இங்கிருந்து செல்லுங்கள் என்று பெரியசாமி கூறியுள்ளார். இதனால் பெரியசாமியை 6 பேரும் தகாத வார்த்தையில் பேசி திட்டியுள்ளனர். இதில் பெரியசாமிக்கும், அந்த கும்பலுக்கும் அடிதடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதைப்பார்த்த வளர்மதியின் மகன்கள் கலைச்செல்வன், ராஜ்குமார் ஆகியோர் ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டுள்ளனர். அதற்கு பக்கத்தில் கிடந்த மரக்கட்டை மற்றும் கம்பியை எடுத்து 6 பேரும் சேர்ந்து 3 பேரையும் தாக்கியுள்ளனர். இதில் பெரியசாமிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து பெரியசாமி சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் சார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் வெள்ளக்கிணறு பகுதியைச் சேர்ந்த சதீஷ் மற்றும் தனியார் கல்லூரி மாணவர்களான பாலாஜி, ராஜ், தீபக், வட மதுரையை சேர்ந்த ஆசிக், சின்னவேடம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஹரிஹரன் என்பதும் தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து சரவணம்பட்டி போலீசார் சதீஷ், பாலாஜி, ராஜ், தீபக் ஆகியோரை கைது செய்தனர். தப்பிச்சென்ற ஆஷிக் ஹரிஹரன் ஆகிய 2 பேரை தேடி வருகின்றனர்.

Views: - 185

0

1