வீட்டில் இருந்தவர்களை கட்டிப்போட்டு கொள்ளை… ரூ.40 லட்சம் மதிப்பிலான ரொக்கம், நகை அபேஸ் ; கோவையில் அதிர்ச்சி சம்பவம்..!!

Author: Babu Lakshmanan
7 February 2024, 1:05 pm
Quick Share

கோவை பீளமேடு பகுதியில் அதிகாலையில் வீட்டில் இருந்த ஐந்து பேரை கட்டிப்போட்டு கத்தியை காட்டி மிரட்டி 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகை, பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை உப்பிலிபாளையம் பகுதியில் ஹார்டுவேர் கடை நடத்தி வருபவர் முகமது. இவர் பீளமேடு புராணி காலனி பகுதியில் தனது தந்தை, மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், இன்று அதிகாலை சுமார் 1.30 மணி அளவில் அவரது வீட்டில் முன்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல், கத்தியை காட்டி மிரட்டியதுடன், வீட்டில் இருந்த ஐந்து பேரையும் கட்டி போட்டு அங்கிருந்த நகை பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துள்ளனர்.

பின்னர், சுமார் நான்கு மணி நேரம் அங்கிருந்த மர்ம நபர்கள், அதிகாலை 5 மணிக்கு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். மெக்கா செல்வதற்காக 10 லட்சம் ரூபாய் பணத்தை அவர் பீரோவில் வைத்திருந்த நிலையில், அந்த பணத்தை கொள்ளையடித்த கும்பல், பீரோவிலிருந்த சுமார் 20 சவரன் தங்கம் வைர நெக்லஸ், வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் மற்றும் விலை உயர்ந்த கைகடிகாரம் உட்பட சுமார் 40 லட்சம் மதிப்பிலான நகைகள் மற்றும் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வீட்டின் காவலாளி விடுப்பில் இருந்ததால் கடையில் வேலை பார்க்கும் நபரை காவலுக்கு அமர்த்திய நிலையில், அவரும் வீட்டில் உள்ள ஒரு அறையில் தூங்கியதால் சம்பவம் நடந்தது எதுவும் தெரியாமல் இருந்துள்ளது. மேலும், கடையில் பணியாற்றுபவர்களுக்கு ஊதிய தொகை கொடுப்பதற்காக வைத்திருந்த தொகையும் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

தொடர்ந்து, கொள்ளையர்கள் அங்கிருந்து வெளியேறிய பிறகு வீட்டில் இருந்தவர்கள் சப்தமிட்டதால், அங்கு வந்த அருகில் இருந்தவர்கள் அளித்த தகவலின் பேரில், விரைந்து சென்ற போலீசார் சம்பவ இடத்தில தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். உதவி ஆணையர்கள் கணேசன் மற்றும் பார்த்திபன் உள்ளிட்டோர் சம்பவ இடத்தில் விசாரணையில் ஈடுபட்டுள்ள சூழலில், சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிப்பதற்காக நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அதே வேளையில், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் சரளமாக பேசியதாகவும், அவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்களாக இருக்க வாய்ப்பு இல்லை எனவும் தகவல் வெளியாகயுள்ளது.

இதேபோல் நேற்று முன்தினம் கோவை மத்திய சிறையில் இருந்து இதேபோன்று வீட்டில் இருந்தவர்களை கட்டிப்போட்டு தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு கைதாகிய நபர்கள் விடுதலையாகி இருந்ததாகவும், எனவே அந்த நபர்கள் இந்த சம்பவத்தில் ஏதேனும் தொடர்பில் இருக்க வாய்ப்பு உள்ளதா என்ற அடிப்படையிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 131

0

0