மனமுருகி கண்களை மூடி சாமியை வேண்டிய பெண்… நைஸாக வேலையைக் காட்டிய நபர் ; அதிர்ச்சி வீடியோ…!!

Author: Babu Lakshmanan
28 February 2024, 1:47 pm
Quick Share

அன்னூர் மன்னீஸ்வர சுவாமி திருக்கோவிலில் சாமி கும்பிட வந்த பெண்ணிடம் லாபகமாக செல்போனை திருடி சென்ற மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியது.

கோவை மாவட்டம் அன்னூரில் சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு மன்னீஸ்வரர் சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பிரதோஷம் உள்ளிட்ட விசேஷ தினங்கள் மட்டுமல்லாது, அனைத்து தினங்களிலும் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்வர்.

இந்த நிலையில், கடந்த 24 ஆம் தேதி காலை 11 மணியளவில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து பெண் ஒருவர், சாமி கும்பிட வந்துள்ளார். அப்போது, அங்கு வந்த மர்ம நபர் சாமி கும்பிடுவது போல் நடித்து, அந்தப்பெண் மெய்மறந்து சாமி தரிசனம் செய்திருந்த வேளையில், அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவரது செல்போனை லாபகமாக திருடி சென்றார். இந்த காட்சிகள் கோவில் வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இதுகுறித்து அப்பெண் அன்னூர் காவல் நிலையத்தில் பிப்ரவரி 26 ஆம் தேதி இரவு 10 மணியளவில் புகார் அளித்துள்ளார்.புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அன்னூர் காவல் ஆய்வாளர் நித்யா தலைமையிலான போலீசார், கோவில் வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சிசிடிவி காட்சிகள் இன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Views: - 138

0

0