‘இந்த நிலைமை வேறு யாருக்கும் வரக்கூடாது’… வீடியோவை வெளியிட்டு குடும்பத்தோடு தற்கொலைக்கு முயன்ற பிரபல ஜோதிடர்..!!

Author: Babu Lakshmanan
3 August 2022, 7:46 pm
Quick Share

கோவை : பொய் வழக்கு போடுவதாகக் கூறி, கோவையைச் சேர்ந்த பிரபல ஜோதிடர் ஒருவர், வீடியோவை வெளியிட்டு குடும்பத்தோடு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் கருப்பையா என்பவர் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். செங்கல்பட்டில் உள்ள இவரது இடத்தில் நிலப்பிரச்சனை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக இந்து மக்கள் கட்சியை சேர்ந்த ஜோதிடர் பிரிவு துணை தலைவர் பிரசன்ன சுவாமிகள் என்பவரை அணுகியுள்ளார்.

அவர் தனக்கு தெரிந்தவர்கள் மூலம் இந்தப் பிரச்சனை தீர்த்து வைப்பதாகக் கூறி, கடந்த 2020 முதல் சுமார் 25 லட்சம் பணம் வாங்கியதாக சொல்லப்படுகிறது. அதோடு, மாங்கல்ய பூசை செய்தால் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் எனக் கூறி தனது மனைவியின் 15 சவரன் தங்க நகையையும் பெற்றுக் கொண்டதாக கருப்பைய தெரிவித்துள்ளார்.

பணம், நகையை வாங்கிய பிறகு நிலப் பிரச்சனையை தீர்த்து வைக்கவில்லை எனக் கூறி, ஜோதிடர் பிரசன்னா மீது கோவை செல்வபுரம் போலீஸில் கருப்பையா புகார் அளித்துள்ளார். அதன்பேரில், ஜோதிடர் பிரசன்ன சுவாமிகள், அவரது மனைவி அஸ்வினி, ஆர்.எஸ்.புரம் பகுதியை ஹரபிரசாத், பிரகாஷ் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த நிலையில், தனது மீது வேண்டுமென்றே பொய் புகார் கொடுத்திருப்பதாகக் கூறி, ஜோதிடர் பிரசன்னா தனது குடும்பத்தினருடன் தற்கொலைக்கு முயன்றுள்ளார். தற்கொலை செய்வதற்கு முன்னதாக வீடியோவை வெளியிட்ட அவர், திட்டமிட்டே தன்னையும், தனது குடும்பத்தையும் சிக்கலில் மாட்டி விடுவதாக தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, ஜோதிடர் பிரசன்ன சுவாமிகள் தனது மனைவி, மகள், தாயாருடன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். வீட்டில் குடும்பத்துடன் பூச்சி மருந்து குடித்தவர்களை பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

இதில், பிரசன்னா சுவாமியின் தாயார் கிருஷ்ணகுமாரி (65) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

Views: - 639

0

0