‘ரிமேண்ட் பண்ணிடுவேன்… உன்ன மாதிரி ஆயிரம் பொம்பளைகளை பார்த்துட்டேன் போ’.. மாற்றுத்திறனாளி பெண்ணை மிரட்டிய காவல் ஆய்வாளர்..!!

Author: Babu Lakshmanan
9 May 2023, 2:14 pm
Quick Share

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி பெண் தர்ணாவில் ஈடுபட்ட நிலையில், காவல் ஆய்வாளர் அவரை ஒருமையில் பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை கிணத்துக்கடவு, தேவராயபுரம் பகுதியைச் சேர்ந்த தனலட்சுமி என்ற மாற்றுத்திறனாளி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் அமர்ந்தார். பக்கத்து இடத்துக்காரர் குட்டையில் இருந்து ஆற்றுக்குப் போகும் இடத்தை ஆக்கிரமிப்பு செய்ததால் தனது வீட்டிற்குள் தண்ணீர் புகுந்து விட்டது எனவும், இதற்கு மாவட்ட நிர்வாகம், ஊர் தலைவர்கள் எந்த உதவியும் செய்யவில்லை எனவும், பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லாததால் தர்ணா போராட்டம் நடத்தினார்.

இந்த நிலையில் தர்ணாவில் அமர்ந்த மாற்றுத் திறனாளி பெண்ணிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மாற்றுத்திறனாளி பெண் தர்ணாவை முடித்து மாவட்ட ஆட்சியரிடம் காவல்துறையுடன் சேர்ந்து மனு அளிக்க சென்றார். அப்போது நுழைவாயிலில் இருந்து வேகமாக வந்த கோவை பந்தய சாலை காவல் ஆய்வாளர் சாந்தகுமார் பெண்ணிடம் மனுவை வாங்கி பார்த்தார்.

தொடர்ந்து, உங்கள் மனு நியாயமான மனு எனத் தெரிவித்த அவர், ‘ரிமேண்ட் பண்ணிடுவேன், உன்ன மாதிரி ஆயிரம் பொம்பளைகளை பார்த்திருக்கேன் போ,’ என ஒருமையில் மிரட்டினார்.

இதற்கு பின் வந்த மற்றொரு பெண் ஆய்வாளர் மாற்றுத்திறனாளி கையை பிடித்து இழுத்தார். அப்போது மாற்றுத்திறனாளி நிலை தடுமாறினார். இந்த நிலையில் மனு கொடுக்க வந்தவரை காவல் துறையினர் மிரட்டுவதாக மாற்றுத்திறனாளி தனலட்சுமி குற்றம்சாட்டியுள்ளார்.

Views: - 258

0

0