பிரபல யூடியூபர் வீட்டில் திருட வந்த திருடன் அசந்து தூங்கிய சம்பவம் : பிறந்த நாள் சர்ப்ரைஸ் என நினைத்த நண்பர்கள் : இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி..!

Author: Babu Lakshmanan
23 January 2023, 5:06 pm
Quick Share

கோவை : கோவையில் யூடியூபர் ஒருவரின் வீட்டிற்குள் புகுந்து திருட முயன்ற திருடன், அசதியில் தூங்கியதால் சிக்கிய சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.

க.க. சாவடி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பிச்சனூர் பகுதியைச் சேர்ந்த சுஹைல் (29). இவர் சுஹைல் விலாக் என்னும் பெயரில் யூடியூப்பில் வீடியோக்களை போட்டு வருகிறார். இந்த நிலையில், கடந்த 21ம் தேதியன்று திருடன் ஒருவன் புகுந்து, கத்தியைக் காட்டி மிரட்டி, அவரிடம் இருந்த செல்போனை பறிக்க முயன்றுள்ளார்.

பின்னர், தனது நண்பரின் உதவியுடன் அந்த திருடனை இலாவகமாக மடக்கி பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், வீடு புகுந்து திருட முயன்ற நபர் புதுச்சேரியை சேர்ந்த அனுராமன் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அனுராமனை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், தனது வீட்டில் நடந்த திருட்டு முயற்சி சம்பவம் குறித்து சிசிடிவி காட்சிகளுடன் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், அவர் பேசியதாவது :- திருடன் வீட்டின் காம்பவுண்டை தாண்டிக் குதித்து உள்ளே வந்துள்ளான். கதவை உடைத்து வீட்டிற்குள் வந்திருந்தால் அலாரம் அடித்திருக்கும். ஆனால் அப்படி செய்யாமல் பின்பக்க வழியாக மொட்டை மாடிக்கு சென்று 3 மணி நேரம் தூங்கியுள்ளான். எதையும் எடுத்துச் செல்லாமல் தூங்கியுள்ளான். என்ன செய்கிறொம் எனத் தெரியாமல் அவன் செய்தது போல இருந்தது.

பிறந்தநாள் கொண்டாட்ட ஏற்பாட்டிற்காக அதிகாலையில் எழுந்து லேப்டாப்பில் படம் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது வீட்டிற்கு வந்த நண்பர் ஹரி, வாட்ஸ் ஆப்பில் போன் செய்தான். நான் லேப்டாப் உடன் வெளியே சென்ற போது, ஒருவன் திடீரென பின்னால் வந்து என்னை பிடித்துக் கொண்டான். கையில் கத்தியை வைத்திருந்தான். முதலில் தெரிந்தவர்கள் தான் விளையாட்டிற்கு செய்வதாக நினைத்தோம். பின்னர் தான் திருடன் என்பது தெரிந்தது.

கத்தியை காட்டி கையில் இருந்த செல்போனை திருட முயன்றான். உடனே அவனது கையைப் பிடித்து சுற்றி, கீழே தள்ளிவிட்டு கத்தியை பிடுங்கினோம். பின்னர் அவனது கை, கால்களை கயிறு வைத்து கட்டி அமரவைத்தோம். அவனிடம் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கவில்லை. காவல் நிலையத்திற்கு தகவல் அளித்து, காவல் துறையினர் வந்ததும் அவனை ஒப்படைத்தோம். இச்சம்பவத்தால் பாதுகாப்பு மற்றும் கவனமாக இருப்பது குறித்து கற்றுக் கொண்டோம், எனத் தெரிவித்துள்ளார்.

Views: - 466

0

0