மீனாட்சியம்மன் கோவில் தக்கார் கருமுத்து கண்ணனின் உடல் தகனம் : இறுதிச்சடங்கில் கண்ணீர் விட்டு கதறிய இருமகள்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
24 May 2023, 6:44 pm
Karumuttu Kannan - Updatenews360
Quick Share

கருமுத்து கண்ணன் உடலுக்கு அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் இறுதி மரியாதை செலுத்தினர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் கருமுத்து கண்ணன்(70) நேற்று அதிகாலை 4.50 மணிக்கு உடல்நலக்குறைவால் காலமானார். கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கருமுத்து கண்ணன் கோச்சடை பகுதியில் உள்ள வீட்டில் நேற்று காலமானார்.

இவரது இறுதிச் சடங்குகள் மதுரை கோச்சடையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று நடைபெற்றது. கருமுத்து கண்ணன் 15 ஆண்டுகளுக்கு மேலாக மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலராகவும், தியாகராஜர் கல்விக்குழும தலைவராவும், தியாகராஜர், மீனாட்சி நூற்பாலைகளின் அதிபராகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேற்று அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா ஆகியோர் கருமுத்து கண்ணனின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

இதனை தொடர்ந்து அமமுக சார்பில் நிர்வாகிகள் இ.மகேந்திரன், டேவிட் அண்ணாத்துரை தலைமையில் அமமுகவினரும், கோவில் பணியாளர்கள், சிவாச்சாரியார்கள், ஆன்மீக தலைவர்கள், ஓதுவார்கள், இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், ஏராளமான தொழிலதிபர்கள், பேராசிரியர்கள், மாணாக்கர்கள், மீனாட்சியம்மன் கோவில் பக்தர்கள் , காவல்துறையினர், அரசு அதிகாரிகள், அனைத்து அரசியல் கட்சியினர், அமைப்புகளை சேர்ந்தவர்கள் என ஏராளமானோர் கருமுத்து கண்ணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நிலையில் இன்று 2 ஆவது நாளாகவும் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் மறைந்த கருமுத்து கண்ணன் உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். தியாகராஜர் மில்ஸ்சை சேர்ந்த ஊழியர்கள் சட்டையில் கருப்பு பட்டை அணிந்து அஞ்சலி செலுத்தினர்.

2ஆவது நாளாக கருமுத்து கண்ணன் உடலுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், மீனாட்சியம்மன் கோவில் நிர்வாகம் சார்பில் துளசி மாலை, சம்மங்கி மாலை, ரோஜாப்பூ மாலை உள்ளிட்டவற்றை கோவில் துணை ஆணையர் அருணாச்சலம் தலைமையில் சிவாச்சாரியார்கள் கொண்டு வந்து அஞ்சலி செலுத்தினா்

தொடர்ந்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

இதனை தொடர்ந்து வெளிநாடுகளில் வசிக்கும் அவரது இருமகள்களும் தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டனர். இதனையடுத்து கருமுத்து கண்ணன் உடல் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு தத்தனேரி மயானத்தில் எரியூடப்பட்டது.

Views: - 375

0

0