அநியாயமாக பறிபோன மாணவனின் உயிர்… சாலையை ஸ்தம்பிக்க வைத்த கல்லூரி மாணவர்கள்; போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு..!!!

Author: Babu Lakshmanan
13 October 2023, 1:50 pm
Quick Share

கடலூர் தேவனாம்பட்டினம் அரசு கலைக்கல்லூரி மாணவர் ஷேர் ஆட்டோ கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த நிலையில், உரிய பேருந்து வசதி செய்து தரக்கோரி கல்லூரி மாணவர்கள் தேவனாம்பட்டினம் கடற்கரை சாலையில் சாலை மறியல் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மணப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவர் தமிழ்செல்வன். இவா் கடலூா் அரசுக் கல்லூரியில் படித்து வந்தாா். இந்நிலையில், நேற்று முன்தினம் கல்லூரி முடிந்து ஷேர்ஆட்டோவில் வீடு திரும்பினார். ஷேர் ஆட்டோவில் 10க்கும் மேற்பட்டோர் பயணம் செய்த நிலையில், கடலூா் தேவனாம்பட்டினம் உப்பனாறு பாலம் அருகே சென்றபோது, ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் தமிழ்செல்வன் உயிரிழந்தாா். அவரது சடலம் சொந்த ஊரான பண்ருட்டியை அடுத்துள்ள மணப்பாக்கத்தில் இறுதி அஞ்சலிக்காக வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, உறவினா்கள், கிராம மக்கள் மற்றும் அரசுக் கல்லூரி மாணவா்கள் அஞ்சலி செலுத்த வந்திருந்தனா். அப்போது, அதே கிராமத்தைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்டோா் ஒன்று திரண்டு கடலூா் – சேலம் நெடுஞ்சாலையில் அங்குசெட்டிப்பாளையம் அருகே மறியலில் ஈடுபட்டனா்.

அரசு அறிவித்துள்ள ரூ.2 லட்சம் இழப்பீடு போதாது, ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.

இந்நிலையில் நேற்று கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில் இன்று மீண்டும் கல்லூரி திறக்கப்பட்டது. அப்பொழுது, கல்லூரியில் குவிந்த மாணவர்கள் தேவனாம்பட்டினம் சாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகையிட பேரணியாக சென்றனர். தகவல் அறிந்து சென்ற கோட்டாட்சியர் அதியமான் கவியரசு மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

மேலும், பேச்சுவார்த்தையில் மாணவர்களுக்கு உரிய பேருந்து வசதி செய்து தர வேண்டும் என கோரிக்கை வலியுறுத்தி மாணவர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

மாணவர்களின் சாலை மறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு நிலவியதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வஜ்ரா வாகனம் வரவழைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Views: - 280

0

0