திடீரென கேட்ட துப்பாக்கி சத்தம்… ரத்த வெள்ளத்தில் கிடந்த பிரபல தொழிலதிபர் ; கிருஷ்ணகிரியில் பயங்கர சம்பவம்!!

Author: Babu Lakshmanan
13 October 2023, 1:24 pm
Quick Share

திடீரென கேட்ட துப்பாக்கி சத்தம்… ரத்த வெள்ளத்தில் கிடந்த பிரபல தொழிலதிபர் ; கிருஷ்ணகிரியில் பயங்கர சம்பவம்!!

கிருஷ்ணகிரியில் பிரபல தொழிலதிபரும் வணிகர் சங்க பேரமைப்பின் நகர தலைவருமான எம்.பி. சுரேஷ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் எம்.பி.சுரேஷ். கிருஷ்ணகிரி நகரில் பிரபல நகைக்கடை மற்றும் வணிக வளாகம் நடத்தி வரும் இவர், ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். மேலும், அனைத்து வணிகர் சங்க பேரமைப்பின் நகர தலைவராக உள்ள சுரேஷ், நேற்று இரவு வீட்டிற்கு சென்று மனைவி மகளிடம் நன்றாக உரையாடிவிட்டு, பின் தனது அறைக்கு உறங்க சென்றுள்ளார்.

இந்த நிலையில், இன்று காலை திடீரென அவரது அறையில் இருந்து துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டதை அடுத்து, உறவினர்கள் உடனடியாக அவர் அறைக்கு சென்று பார்த்த பொழுது, தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதனை அடுத்து, அவரது குடும்பத்தார் உடனடியாக கிருஷ்ணகிரி நகர போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

தகவல் அறிந்து வந்த பர்கூர் சரக டி.எஸ்.பி மனோகரன் மற்றும் போலீசார் தற்கொலை செய்துகொண்ட தொழிலதிபர் சுரேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், லைசென்சுடன் வைத்துள்ள அவரது துப்பாக்கியை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீசார் முதற்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்சினை அல்லது கடன் பிரச்சினை காரணமாக தற்கொலை செய்துகொண்டு இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

தொழிலதிபரும், அனைத்து வணிகர் சங்க பேரமைப்பின் நகர தலைவருமான எம்.பி.சுரேஷ் தற்கொலை செய்துகொண்டதை அடுத்து வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் கிருஷ்ணகிரி நகரில் கடை அடைப்பு செய்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Views: - 338

0

0