இரு சமூகத்தினரிடையே மோதல்.. பெண் தற்கொலை முயற்சி ; வீட்டையும் அடித்து நொறுக்கியதால் பரபரப்பு

Author: Babu Lakshmanan
20 January 2024, 12:39 pm
Quick Share

மொரப்பூர் அருகே இரு சமூகத்திற்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையால் பெண் ஒருவர் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அடுத்த ஆர்.எஸ்.தொட்டம்பட்டியில் உள்ள பெரியார் நகரில் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதில் பட்டியலின (மாற்று) சமூகத்தினரும், மூன்று குடும்பத்தைச் சேர்ந்த மற்றொரு சமூகத்தினரும் உள்ளனர். இதில் நந்தகுமார் மனைவி பவுனம்மாள், இவர் வீட்டிற்கும் பட்டியலின (மாற்று) சமூகத்தைச் சார்ந்த ஒரு வீட்டிற்கும் இடையில் ஒரு சென்ட் புறம்போக்கு நிலம் உள்ளதாக சொல்லப்படுகிறது.

அந்த இடத்தில் கிருஷ்ணகிரியில் இருந்து ஒரு பெண்ணை பட்டியலின (மாற்று) சமூகத்தைச் சார்ந்தவர்கள் வீடு கட்டி குடியமர்த்தி உள்ளனர். இது தொடர்பாக பவுனம்மாள், மொரப்பூர் காவல் நிலையம் மற்றும் தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

இந்த புகாரின் அடிப்படையில் தொட்டம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் ஆய்வு மேற்கொண்டதில் புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி இருப்பது தெரியவந்துள்ளது. ஆனால், இதுவரை அந்த வீடு அப்புறப்படுத்தாமல் இருக்கின்ற நிலையில், நேற்று இரவு பவுனம்மாளின் அக்கா மகள் பிறந்தநாள் விழாவில், அவருடைய அக்காவின் கணவர் மது அருந்திவிட்டு மது பாட்டிலை உடைத்து அலப்பறை செய்துள்ளதாக கூறப்படுகிறது. மதுஅருந்தி அலப்பறை செய்த நபரை அடித்து விட்டதாக சொல்லப்படுகிறது.

பிறந்தநாள் விழாவிற்கு வந்து அலப்பறை செய்த அந்த நபரை அடித்தவர்களிடம் பவுனம்மாள் கேட்டதாகவும், ஏற்கனவே பவுனம்மாள் மீது கோபத்தில் இருந்த அந்த நபர்கள் அவரை மட்டுமல்ல உன்னையும் அடிப்போம் என தாக்கப்பட்டுள்ளனர். திருமணமாகி 20 வருட காலத்தில் தன் கணவர் கூட அடித்ததில்லை என்ற மனவேதனையில் பவுனம்மாள், விஷம் அருந்தியதாகவும், பின்பு அவரை மீட்டு அரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பவுனம்மாளை பார்த்துவிட்டு ஊருக்கு சென்ற உறவினர்கள், அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பவுனம்மாளின் வீட்டையும் அடித்து நொறுக்கி உள்ளனர். அதை செல்போனில் படம் பிடித்த பவுனம்மாளின் மகள் காவியாவை அடித்து செல்போனை பிடுங்கி உடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதை கேட்ட காவியாவின் கணவர் கார்த்திக்கையும் அடித்துள்ளனர்.

இது குறித்து மொரப்பூர் காவல் நிலையத்தில் காவியா, (19) புகார் செய்துள்ளார். தாக்குதலுக்கு உள்ளான காவியா, இவரது கணவர் கார்த்தி மற்றும் அர்ஜுனன், மூன்று பேரும் அரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், தாக்குதலில் ஈடுபட்ட மணி, ராஜசேகர், வீரமணி, சூர்யா, சக்திவேல், பாவேந்தன், ஆம்ஸ்ட்ராங், உள்ளிட்ட 15 பேர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும், இதற்கு எங்களுக்கு நீதி வேண்டும் என பாதிக்கப்பட்டோர் கோரிக்கை வைத்துள்ளனர்.

Views: - 288

0

0