மின்சாரம் தாக்கி துடிதுடித்த தாய்… காப்பாற்றச் சென்ற மகன்… உடல்கருகி 3 பேர் உயிரிழப்பு ; தருமபுரியில் நடந்த சோகம்…!!

Author: Babu Lakshmanan
11 August 2023, 11:27 am
Quick Share

தருமபுரி அருகே மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே திண்டல் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஒடச்ச கரை கிராமத்தை சேர்ந்தவர் மாது என்பவரது மனைவி மாதம்மாள் (60), இவரது மகன் பெருமாள் (33).

மாதம்மாள் தனது வீட்டருகே உள்ள மின் கம்பத்திலிருந்து நெல்லிக்காய் மரம் ஒன்றில் துணி காய வைக்க இரும்பு கம்பியினை கட்டி வைத்திருந்துள்ளார். தாழ்வாக தொங்கி கொண்டிருந்த கம்பியை இழுத்து கட்டுவதற்காக கம்பியை தொட்ட போது, மின்சாரம் தாக்கி மாதம்மாள் துடி துடித்துள்ளார்.

தாயின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த மாதம்மாளின் மகன் பெருமாள் தாயை காப்பாற்ற கட்டை ஒன்றினை எடுத்து கம்பி மீது அடித்திருக்கிறார். கம்பி அறுந்து கீழே விழந்து சுருண்டபோது பெருமாளையும் சேர்த்து சுருட்டியதில் பெருமாள் மீது நொடிப்பொழுதில் மின்சாரம் பாய்ந்திருக்கிறது.

இதனை கண்ட உறவி்னர் சரோஜா (60) பதறி போய் இருவரையும் தொடவே, அவரையும் மின்சாரம் தாக்கியதில் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயரிழந்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காரிமங்கலம் போலீசார் மூன்று பேரின் பிரேதங்களையும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகள் உள்ளிட்ட மூன்று பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி கிராம மக்களிடையே பெறும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 362

0

0