தர்மபுரியில் கர்ப்பிணி யானை உயிரிழப்பு.. பிரேத பரிசோதனைக்கு பிறகு உடலை வீசிச் சென்ற வனத்துறையினர்… தொடரும் அலட்சியம்!!!

Author: Babu Lakshmanan
22 April 2023, 9:05 am
Quick Share

ஒகேனக்கல் வனச்சரகத்திற்கு உட்பட்ட காப்பு காட்டில் உயிரிழந்த கர்ப்பிணி யானையின் உடலை பிரேத பரிசோதனைக்கு பின்பு வனப்பகுதியில் வீசிச் சென்ற கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனச்சரகத்திற்கு உட்பட்ட வட்டவன அள்ளி ஊராட்சி, சின்னாறு வனப்பகுதியில் 24 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக வன ஊழியர்கள் மூலம் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தரப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நேற்று காலை முதல் மருத்துவ குழுவினருடன் சென்ற வனத்துறை அதிகாரிகள் பெண் யானைக்கு சிகிச்சை மேற்கொண்டனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு பெண் யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இரவோடு இரவாக யானைக்கு பிரேத பரிசோதனை மேற்கொண்டனர்.

அப்பொழுது, அந்த யானை கர்ப்பிணி யானை எனவும், அதன் வயிற்றில் 12 மாத ஆண் யானை குட்டி இருந்தும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பிரேத பரிசோதனை முடிந்த நிலையில் யானையின் உடல் பாகங்களை வனப்பகுதியில் ஆங்காங்கே வீசிவிட்டு வனத்துறையினரும், மருத்துவ குழுவினரும் கலைந்து சென்று விட்டனர்.

உயிரிழந்த யானையை அடக்கம் செய்யாமல் வனப்பகுதியில் உடல் பாகங்களை வீசிச் சென்ற கொடூரம் ஒகேனக்கல் வனச்சரகத்தில் ஏற்பட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. மின்சாரம் தாக்கியும், கிணற்றில் விழுந்தும், சேற்றில் சிக்கியும் சில யானைகள் உயிரிழந்த நிலையில், சில யானைகளின் இறப்பிற்கான காரணமே அறிவிக்காமல் வனத்துறையினர் மூடி மறைத்துள்ளனர்.

வெளியுலகுக்கு தெரிந்து பத்துக்கு மேற்பட்ட யானைகள் உயிரிழந்த நிலையில், அடர்ந்த வனப்பகுதியில் வெளியுலகுக்கு தெரியாமல் பல்வேறு யானைகள் உயிரிழந்ததாகவும், அதனை வெளியுலதற்கு சொல்லாமல் மூடி மறைத்து வளத்துறையினர், பல்வேறு சட்டவிதி மீறல்களை செய்து வருவதாகவும், வனத்துறையை ஒட்டி உள்ள பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

வனத்துறையினரின் தொடர் அலட்சியத்தால் பாதுகாக்க வேண்டிய வன உயிரினங்கள் அழிந்து வருவது சமூக ஆர்வலர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 233

0

0