சாக்கடை அமைப்பதில் தகராறு… ஜிம் மாஸ்டர் கத்தியால் குத்தி கொலை ; பக்கத்து வீட்டுக்காரர் தலைமறைவு

Author: Babu Lakshmanan
20 January 2024, 2:52 pm
Quick Share

சாக்கடை கால்வாய் அமைப்பதில் ஏற்பட்ட தகராறில் ஜிம் மாஸ்டர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி அருகே எட்டிமரத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவப்பிரகாசம் (39). இதே ஊரை சேர்ந்த பக்கத்து வீட்டுக்காரர்வெங்கடேஷ். இவர் கார்பென்டராக தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இவர்கள் வசிக்கும் தெருவில் புதிதாக சாக்கடை கால்வாய் அமைப்பதில் கடந்த சில நாட்களாக பிரச்சனை நிலவி வந்துள்ளது. இதனால் சிவப்பிரகாசத்திற்கும், வெங்கடேசிற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

நேற்று மாலையும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், ஊர் பொதுமக்கள் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த நிலையில், இன்று காலை மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்பொழுது, கார்பென்னடர் வெங்கடேஷ் தலைக்கேறிய மது போதையில், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சிவபிரகாத்தை இருமுறை குத்தியுள்ளார். இதனால் அங்கேயே சரிந்து விழுந்த சிவபிரகாசத்தை அக்கம்பக்கத்தினர் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

ஆனால் வழியிலேயே உயிர் பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இறந்து போன சிவப்பிரகாசம் தர்மபுரியில் உடற்பயிற்சி நிலையம் வைத்து தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ஒரு சாக்கடைக்காக நடந்த சண்டை கொலையில் முடிந்திருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக மதிகோண்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, தலைமறைவாகியுள்ள வெங்கடேசை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனக்கூறி உயரிழந்துள்ள சிவப்பிரகாசத்தின் உறவினர்கள் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு திடிரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலிசாரின் பேச்சுவார்த்தைக்கு பிறகு சாலை மறியலை கைவிட்டனர்.

Views: - 387

0

0