இன்னும் 10 ஆண்டுகளில் மேஜர் கில்லராகும் சர்க்கரை நோய்… இளைஞர்களுக்கு ரொம்பவே ஆபத்து ; எச்சரிக்கும் மருத்துவர்

Author: Babu Lakshmanan
25 November 2023, 5:08 pm
Quick Share

சர்க்கரை நோய் இன்னும் 10 ஆண்டுகளில் மேஜர் கில்லராக இருக்கும் என்று மதுரையில் விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்த மருத்துவகல்லூரி டீன் ரத்தினவேல் எச்சரித்துள்ளார்.

மதுரை கேகே நகர் பகுதியில் உள்ள (மேக்ஸிவிஷன்) தனியார் கண் மருத்துவமனை சார்பாக உலக நீரழிவு நோய் தினத்தை யொட்டி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. விழிப்புணர்வு பேரணியை மதுரை அரசு ராஜாஜி மருத்துவக் கல்லூரி டீன் ரத்தினவேல் துவக்கி வைத்தார்.

முன்னதாக நீரழிவு நோயினை பற்றி அவர் பேசியபோது :- சர்க்கரை நோய் இன்னும் 10 ஆண்டுகளில் மேஜர் கில்லராக இருக்கும். ஒரு காலத்தில் காலரா போன்ற நோய் மேஜர் கில்லராக இருந்தது. அடுத்த 10 ஆண்டுகளில் சர்க்கரை நோய், இருதய நோய் மேஜர் கில்லராக இருக்கும்.

இது மருத்துவ கைகளுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும். நோயாளிகளின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகும் அரசால் மக்களை தேடி மருத்துவம் மூலம் வீடு தேடி சென்று மருந்து, மாத்திரை கொடுத்தாலும், அதை சரி பண்ணினாலும் நோய்களின் தாக்கம், பாதிப்பு அதிக அளவில் இருக்கும். எனவே, இந்த சர்க்கரை நோய்க்கு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இதை அரசால் மட்டும் செய்ய முடியாது. தனியாரால் மட்டும் செய்ய முடியாது. மக்கள் ஒத்துழைப்புடன் தான் செய்ய முடியும். அனைத்து மக்களும் இணைந்து தான் செய்ய முடியும், இந்த சர்க்கரை நோய் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று.

வயிற்றுப் பகுதி (தொப்பை) நெஞ்சுக்குள் இருந்தால் சர்க்கரை நோய் வராது, ஆபத்தும் வராது. எனவே இது போன்ற தனியார் மருத்துவமனை விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம். என்றார்.

இந்த பேரணியில் மருத்துவர் ராஜ்குமார், பெல்லி ஜி. பாபு மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு கையில் சர்க்கரை நோய் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தியவாறு சென்றனர். இந்த பேரணியானது கேகே நகர் சுகுணா ஸ்டோர் வழியாக தெப்பக்குளம் சென்று நிறைவடைந்தது.

Views: - 271

0

0