டிபன் சாப்பிட வந்த போது மதுபோதையில் மட்டை… எழுந்து போக சொன்னதால் ஆத்திரம் ; பேக்கரியை சூறையாடிய இந்து மகாசபா நிர்வாகி!

Author: Babu Lakshmanan
9 November 2023, 11:21 am
Quick Share

டிபன் சாப்பிட வந்த போது மதுபோதையில் மட்டை… எழுந்து போக சொன்னதால் ஆத்திரம் ; பேக்கரியை சூறையாடிய அகில இந்திய இந்து மகாசபா நிர்வாகி

வேடசந்தூரில் மது போதையில் மட்டையானவரை எழுந்து போக சொன்னதால், அகில இந்திய இந்து மகா சபா மாவட்ட துணை செயலாளர் பேக்கரியை அடித்து நொறுக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஆத்துமேட்டில் பேக்கரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பேக்கரியை கேரளா மாநிலத்தைச் சேர்ந்த யாசிர் என்பவர் நடத்தி வருகிறார். இந்நிலையில், இரவு கடைக்கு மது போதையில் வந்த அகில இந்திய இந்து மகா சபா மாவட்ட துணை செயலாளர் அருண்பாண்டி என்பவர் சிக்கன் ரைஸ் சாப்பிட்டுள்ளார்.

அருண் பாண்டியன் மது போதையின் உச்சத்திற்கு சென்றதால் டேபிளிலேயே படுத்து மட்டையாகி உள்ளார். அவரை கடை ஊழியர்கள் எழுப்பிய போது, டேபிளை விட்டு எழுந்து தரையில் படுத்து உறங்கி உள்ளார். அதன் பிறகு பேக்கரி கடையில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் அருண்பாண்டியை எழுப்ப முயன்றபோது அருண் பாண்டியன் அந்த ஊழியரை தாக்கியுள்ளார்.

அதனை தட்டிக் கேட்க வந்த பஷீர் என்ற முதியவரை தாக்கி கீழே பிடித்து தள்ளியதில் அவரின் மண்டை உடைந்தது. அதன் பிறகும் ஆத்திரம் அடங்காத அருண்பாண்டி கடையில் இருந்த டேபிள் மற்றும் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினார். இதனால் பேக்கரியில் இருந்த தின்பண்டங்கள் சிதறின.

மது போதையில் இருந்தவரை கட்டுப்படுத்த முடியாத பணியாளர்கள் உடனடியாக வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தலையில் காயமடைந்த பஷீரை மீட்டு வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அதனைத்தொடர்ந்து, போலீசார் அருண்பாண்டியனிடம் விசாரணை நடத்திய போது, பேக்கரியில் பிரைட் ரைஸ் அதிக விலைக்கு விற்பனை செய்வதாக கூறி போலீசாரிடமும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, அருண் பாண்டியன் அதிக மது போதையில் இருந்ததால் மறுநாள் காலை காவல் நிலையம் வருமாறு கூறி அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் நள்ளிரவு நேரத்தில் ஆத்து மேடு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 259

0

0