திமுக பெண் நிர்வாகியின் ஆடையை கிழித்து திமுக கவுன்சிலர் அடாவடி… கண்ணீர் மல்க போலீஸில் புகார் ; கோவையில் பரபரப்பு..!!

Author: Babu Lakshmanan
12 June 2023, 10:01 pm
Quick Share

கோவை ; கோவையில் திமுக பெண் நிர்வாகியை திமுக கவுன்சிலர் தாக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்தின் திமுக 20வது வார்டு வட்ட துணைச் செயலாளராக இருக்கும் அன்னபூரணி, தான் வசிக்கக் கூடிய பகுதியில் புதர் மண்டி இருந்த இடத்தை சுத்தம் செய்யச் சொல்லி திமுக கவுன்சிலர் மரியராஜிடம் பலமுறை வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால், அவரது கோரிக்கை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால், அதிருப்திக்குள்ளான அன்னபூரணி, மாநகராட்சி துப்புரவு பணியாளர்களின் உதவியுடன் அந்தப் பகுதியை அவரே சுத்தம் செய்துள்ளார்.

இதனை பார்த்து கடுப்பாக திமுக கவுன்சிலர் மரியராஜ், தன்னுடைய ஆதரவாளர்களுடன் சென்று அன்னபூரணியை தாக்கியதுடன், நைட்டியுடன் இருந்த அவரது ஆடையையும் கிழித்து அராஜகத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அதோடு, அவரை தகாத வார்த்தைகளாலும் திட்டியுள்ளார்.

இது தொடர்பாக திமுக கவுன்சிலர் மரியராஜ் மீது சரவணம்பட்டி காவல்நிலையத்தில் அன்னபூரணி புகார் அளித்துள்ளார். வயதான தந்தை மற்றும் கணவருடன் வசிப்பதால் திமுக கவுன்சிலரால் ஆபத்து ஏற்படும்சூழல் நிலவுவதாக அவர் கண்ணீர்மல்க கூறியுள்ளார்.

இதனிடையே, அன்னபூரணியை திமுக கவுன்சிலர் தாக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 336

0

0